புதன், 14 ஜனவரி, 2009

அறிவாளி கொழுந்தும், நானும்... அகழ்வு ஆராய்ச்சியும்...!

 

  நம்ம ஊரு பட்டுக்கோட்டைங்கோ, அங்கன வருசத்துக்கு ஒரு முறை கலை இரவு நடக்கும். த.மு.எ.ச என்கிற அமைப்பிலிருந்து நடத்துவாங்க. பெரும்பாலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள் அன்றைக்கு நடக்கும்.

இது தோழர்கள் நிகழ்ச்சி...

 

  நமக்கு கலை தாகம் எடுத்து நிகழ்ச்சிக்கு போகலாம் அப்படின்னு முடிவெடுத்து... யாரை துணைக்கு அழைக்கலாம் என்று தலையை பிய்த்துக் கொண்டதில் நம் நண்பர் அறிவாளி கொழுந்து ஞாபகம் வந்தது. ( இப்ப பானுப்ரியா, நக்மா... படம்ன்னா யாரை வேணும்னாலும் கூட அழைத்துக்கொண்டு போயிரலாம். ( பாவனா, ஸ்ரேயா ரசிகர்கள் மன்னிக்கவும். நான் இளமையாக இருந்த போது இவர்கள் தான் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்).

 

  நமக்கு உள்ளூர் செய்தியே விளங்காது. இதுல இவர்கள் சீனா, ரஷ்யா , வியட்நாம், கியூபா... அப்படின்னு வெளியூர் விசயமாவே பேசவாங்க அதனால கொஞ்சம் விவரமான ஆளா இருந்த நமக்கு சந்தேகம் வந்த கேட்டுகலாம் இல்லையா...!

 

  சரின்னு கொழுந்து வீட்டுக்கு போயி வாய்யா இந்த மாதிரி கலை நிகழ்ச்சி இருக்கு போகலாமுன்னு சொன்னேன். அவனும் நீ எதுவும் கோவப்படலைன்னா! நான் வரேன் அப்படின்னு கிளம்பிட்டான். இதுவரைக்கும் பேசாததை புதுசா நம்ம கொழுந்து என்ன பேசிர போறான் அப்படின்னு நானும் கூட கெளம்பி நிகழ்ச்சிக்கு போயிக்கிட்ருந்தோம்.

எப்படியும் முழு இரவு அங்கன இருக்க போறோம் நம்ம LNB ல சாப்பிட்டு போயிரலாம் அப்படின்னு உள்ளர போயி இரண்டு ஸ்பெசல் பூரியை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்...

நான் "கொழுந்து! தேங்காய் சட்னி வைச்சு பூரி சாப்பிட்டு பாரு ரொம்ப நல்லா இருககும்"
  (கொழுந்து ஒரு நக்கல் புன்னகை பூக்க)
  என்ன?
கொழுந்து "புண்ணாக்குல செய்த சட்னி நல்லாதான் இருக்கும்!"
நான் "என்ன? என்ன?? புண்ணாக்குலய!! சும்மா நக்கலடிக்கத!"
கொழுந்து "அப்புறம் பின்னாடி போயி பாரு! நான் தான் கை கழுவும் போது பார்த்தேனே தொட்டியில தேங்காய் புண்ணாக்கு ஊறிக்கிட்டு இருக்கு!"
 

வைச்சுட்டான்யா ஆப்பு! எனக்கு சாப்பிட்டது அப்படியே கொமட்டிக்கிட்டு வந்தது. அப்படியே எழுந்து வந்து நின்னுக்கிட்டிருந்தேன். நம்ம கொழுந்து முழு பூரியையும் பட்டாணியையும் நல்ல முழுங்கிட்டு வந்தான்.

சரி தண்ணீர் குடிக்கலாமுன்னு குவளையை எடுத்து தண்ணீர் குடித்து விட்டு வைக்க, நம்ம கொழுந்து எடுத்து குவளையை பார்க்க எனக்கு உள்ளுக்குள் அப்படியே புகைந்தது. மறுபடி ஒரு கேலி புன்னகை...

நான் "என்ன இப்போ?"
கொழுந்து

"இதுல என்ன எழுதியிருக்குனு பார்த்தியா?"

நான் "இல்லையே!"
  வாங்கி பார்க்க அதில் "இது LNB ல் திருடியது" என்று பாத்திர அச்சு பதித்து இருந்தார்கள். மறுபடி நம்ம கொழுந்து புன்னகைக்க என்னய்யா!?
கொழுந்து "சரி! சரி!! கோவப்படாத அப்புறம் பேசுவோம் வா!"
  அப்பாடி ஒரு வழியா நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு போயி சேர்ந்தாச்சு. "நந்தலாலா" என்கிற பேச்சாளர் காந்தியடிகளின் குச்சிக்கு குச்சி ஐஸ் விளக்கம் கொடுத்துக்கிட்டு இருந்தார். அப்படியே பேசிக்கிட்டே குஜராத் பூகம்பம், அகழ்வாராய்ச்சி எல்லாம் பத்தி பேசினார்.
நான் "கொழுந்து! நல்லா பேசறாருல்ல! "தேசம் எங்கே போயிட்ருக்குன்னு" எவ்வளவு வருத்தப்பட்டு பேசறார் பாரு!"
கொழுந்து "ஆமா! ஆமாம்! நம்ம தோழர்கள்கிட்ட கேளு போனவாட்டி எதோ காசு குறையுதுன்னு கூட்டத்துக்கே வரலையாம் !"
 

(அப்ப தான் நம்ம தோழர்கள் வேற துண்டுயேந்தி வந்துக்கொண்டிருந்தார்கள்.)

எனக்கு மண்டை குடைச்சல் என்ன நாம எதை சொன்னாலும் கொழுந்து உடனே ஒரு பதில சொல்றான். அப்புறம் என்னங்க எதுக்கெடுத்தாலும் ஒரு நொள்ளை இல்லை ஒரு சொட்டையின்னா என்ன பண்றது!

சரின்னு அப்படியே நிகழ்ச்சியை பார்த்துக்கிட்டேயிருந்தோம். நம்ம மதுரை சந்திரன் வந்தார். மக்கள் கவிஞரின் புகழ் பாடும் பாட்டு பாட ஆரம்பித்தார்...

"சும்மா கிடந்த சொல்லை எடுத்து சூட்சும மந்திரம் சொல்லி கொடுத்து...

.......

......

பட்டுக்கோட்டையின் பாட்டு - அது

பதினெட்டு சுவை கூட்டு...."

அப்படின்னு பாடிக்கிட்ருந்தார்... தீடீரென்று நம்ம கொழுந்து விழுந்து, விழுந்து சிரிக்கிறான். எனக்கு சரியான எரிச்சல்

நான்

"என்ன இப்போ? எதுவா இருந்தாலும் சொல்லிட்டு சிரி!"

கொழுந்து "சரி! சரி! கோவப்படாத! இந்த 'இது LNB ல் திருடியது ', 'பூகம்பம்', 'அகழ்வாராய்ச்சி', இந்த பாட்டு எல்லாத்தையும் ஒன்னா சேர்த்தேன் சிரிப்பு வந்துருச்சு!"
நான் " இதுல சிரிக்க என்ன இருக்கு!"
கொழுந்து " ஒன்னுமில்லை தான்! இப்படி நினைச்சு பாரு இப்ப இங்கன பூகம்பம் வந்து நாடு, நகரம், மக்கள் எல்லாம் பூண்டோடு அழிந்து போயிடுறாங்க... அப்புறம் ஆயிரமோ, இரண்டாயிரமோ ஆண்டுகள் கழித்து மனிதர்கள் இந்த இடத்த அகழ்வாராய்ச்சி செய்யும் போது நீ தண்ணீர் குடித்த அந்த குவளையும், இந்த பாட்டும் கிடைத்தால்... அவர்கள் என்ன வரலாறு எழுதுவர்கள் நம்மை பற்றி என்று நினைச்சேன் சிரிச்சேன்..."
நான் "என்ன எழுதுவாங்க இந்த இடத்துல வாழ்ந்த மக்கள் எவர்சில்வர் என்ற உலோகத்தை பயன்படுத்த தெரிந்திருந்திருக்கிறார்கள். அப்பொழுது மாபெரும் கவிஞன் இருந்திருக்கிறான் அவனை பாராட்டி கவிதை எழுதி இருக்கிறார்கள. என்று எழுதுவார்கள்..."
கொழுந்து "அப்படியா!"
நான் "பின்ன வேற என்னய்யா எழுதுவாங்க!"
கொழுந்து "எனக்கு வேற மாதிரி தோணுது!"
நான் "என்ன தோணுது!"
கொழுந்து "இங்கு வாழ்ந்த மக்கள் திருட்டை தொழிலாக கொண்டிருந்தாலும்.. நேர்மையாக, நாணயமாக அந்த பொருள் எங்கே திருடப்பட்டது என்பதை அச்சிட்டு வைத்திருந்திருக்கிறார்கள்!" அப்படின்னு எழுதுவாங்க. அப்புறம் அந்தபாட்டுல முதல் வரியை சொல்லு..."
நான் "சும்மா கிடந்த சொல்ல எடுத்து சூட்சும மந்திரம் சொல்லி கொடுத்து....."
கொழுந்து "அக்காலத்தில் ஒருத்தர் இருந்திருக்கிறார் சொற்களுக்கே மந்திரம் சொல்லி கொடுத்திருக்கிறார்... அப்படின்னுல எழுதுவாங்க!" எல்லாரும் கைத்தட்டுனாங்கல அந்த என்னமோ சுவைன்னு ஒரு வரி... அத சொல்லு..."
நான் "பட்டுக்கோட்டையின் பாட்டு - அது பதினெட்டு சுவை கூட்டு..."
கொழுந்து "தமிழ்ல்ல சுவை எத்தனைப்பா?"
நான் "ஆறு சுவைகள்"
கொழுந்து "இத படிச்சிட்டு என்ன எழுதுவாங்க அக்காலத்திலிருந்த மக்கள் பதினெட்டு சுவைகளை அறிந்திருக்கிறார்கள்" என்று அல்லவா எழுதுவாங்க..."
நான்

"இப்ப என்ன சொல்ல வர நீ!"

கொழுந்து "நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் நீயே சிந்தித்து பாரு!"
 

(இப்படியாக எங்கள் கலை இரவு முடிந்தது. விடியல் வந்து விட்டது வீட்டுக்கு போறோம்.)

திங்கள், 29 டிசம்பர், 2008

வன்புணர்! கொலை செய்!! அழித்தொழி!!!

இறந்த பெண் போராளிகளின் உடல் மீதான வன்முறையை காணொளியாக கண்டப்பொழுது எழுகிற கோபம்... கட்டுபாடற்றதாக... கனன்று... கடைசியில் இதுவும் ஒரு செய்தியாக மூளைக்குள் பதிந்துவிடுகிற மோசமான வாழ்வியலே எனக்கானதாக இருக்கின்றபடியால்...

அங்கே பெண் போராளியின் இறந்த உடல் மீதான பாலியல் வன்முறையை நடத்தவும்... வெறிக்கொண்ட மிருகங்களாக நடந்துக்கொள்ளவுமான சிங்கள இராணுவத்தின் உளவியல் எத்தகையது?

இத்தேடல் 1950களில் தொடங்கி 1983ல் பெரும் வெடிப்பாக நடந்த இன படுகொலைக்கான பின்னணியில் தொக்கி நிற்கிறது!

சிங்கள பேரினவாத அரசியல் என்பது இன வெறியூட்டிய மனிதர்களின் மீதான அரசியலை முன்னெடுக்கிறது. அது சிங்கள வெறியாக மாறி... தமிழர்களை கொலை செய்! வன்புணர்!! அழித்தொழி!!! என்பதாக நீட்சியடைகிறது!

சிங்கள பேரினவாத அரசியல் இன்றைக்கு களத்தில் இறந்து போகிற இராணுவத்தினருக்கு பதிலாக இன்னும் வெறியூட்டிய சிங்கள காடையர்களை உற்பத்தி செய்துக்கொண்டே இருக்கும்!

இதன் இன்னொரு முகத்தை இந்திய துணைகண்டத்திலும்... பார்ப்பானிய(இந்துத்துவ) வெறியாக ஊட்டப்பட்டு குஜராத்தில் இசுலாமியர்களின் மீதும், ஒரிசாவில் கிருத்துவர்கள் மீதும் கொலை செய்! வன்புனர்!! அழித்தொழி!!! என்பதாக நீட்சியடைவதையும்... கண்டுக்கொள்ளலாம்!

இந்த பேரினவாத வெறியை அம்பலப்படுத்தி... மக்களை விழிப்படைய செய்வது ஒரு வழி...
எம்மீது வன்முறையை கைக்கொள்கிற சிங்கள குறியை அறுத்தெறிவோம் என்பது இன்னொரு வழி... (இது சிங்களத்தின் கடைசி குறியை நோக்கிய தேடலாக இருக்கும்!)

திங்கள், 10 நவம்பர், 2008

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!) - 2

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!)

ஓரு சமூகம் தனக்கான உரையாடல் மொழியை எப்படி கட்டமைக்கிறது என்பதை விளக்குவதற்க்காக சிங்கப்பூர் சமூகத்தை எடுத்துக்கொள்கிறேன்.

அரசின் முக்கிய அதிகார மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதன் வழியாகவே தலைவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். பெரும்பான்மை மக்களாகிய சீனர்கள் மாண்டரின் என்கிற சீன மொழியின் எளிமைப்படுத்தப்பட்ட பிரிவை பேசுகிறார்கள். மலாய், தமிழ் மொழிகளும் அதனதன் மக்களால் பேசப்படுகிறது.

ஆங்கிலம் அதிகார மொழியாக இருப்பதால் மக்கள் அப்படியே ஆங்கிலத்தை கரைத்துக்குடித்து ஆங்கிலேயர் போல் பேச முயற்சிக்கவில்லை. தங்களுக்கு ஏற்றார் போல் மொழியை வளர்த்தெடுக்கிறார்கள். "அங்கிள் டூ தே லா" என்பது சாதராண ஓரு கடைக்காரிடம் சிங்கப்பூர் வாசி உரையாடும் மொழி.

can என்கிற ஆங்கில வார்த்தை அதனுடைய மூல பொருளுடன் இங்கே கையாளப்படுவதில்லை. மாற்றாக இங்கே கேள்விச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

இதை ஐரோப்பியர்கள் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றனர் "singlish" என்று. ஓரு குறுகிய காலத்தில் உருவான சமூகம் தனக்கான உரையாடல் மொழியை தானாகவே கட்டமைக்கிறது.

இந்த ஸிங்கிலீஷ் ன் அடித்தளம் ஆங்கிலமாகவும், இரண்டாம் நிலை அடித்தளமாக மலாய் மொழியும். மூன்றாம் நிலையில் தமிழும், மாண்டிரினும் இருப்பதை உணர வேண்டியிருக்கிறது.

இந்த ஸிங்கிலீஷ் தான் சிங்கப்பூர் சமூகத்தின் உரையாடல் மொழியாக பரிணாமம் அடைகிறது. அரசு speak good english என்று நிகழ்வுகள் நடத்தி பார்த்தார்கள். ஓன்றும் வேலைக்காகவில்லை. சமூகத்தின் நகர்வை அதிகார மையத்தால் தடுக்க இயலாது. வேண்டுமானால் தள்ளிப்போடலாம்!

(இதனால என்ன சொல்ல வருகிறாய்! என்று நீங்கள் எதிரொலிப்பது புரிகிறது).

ஆங்கிலம் அடித்தளமாக இருப்பதால் இவர்கள் கற்றுக்கொள்கிற சொற்களின் வேர் லத்தீன், கிரேக்க மொழிகளின் அடித்தளத்தில் இருந்து வந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளாக சென்றால் கற்றுக்கொள்கிற ஓவ்வொரு சொல்லிலும், வழக்கு மொழிகளிலும், பழ மொழிகளிலும் ஐரோப்பியர்களின் வரலாற்று நிகழ்வுகளை, அறிவியலை, அனுபவங்களை மட்டுமே உள்வாங்குவார்கள்.

உதாரணத்திற்க்கு ஜீலை என்கிற மாதத்தின் பெயரை எடுத்துக்கொண்டால் உடனடி விளக்கமாக ஜீலியஸ் சீசர் பற்றிய வரலாறு விரியும்.

இரண்டாம் நிலை அடித்தளமாக மலாய் இருப்பதால் உள்ளூர் அறிவியலை உள்வாங்குவதற்க்கான வாய்ப்பு இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதில் என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பலாம்...

இங்கே சிந்தனை என்பது ஐரோப்பியர்களிடமிருந்து தான் கடன் வாங்கப்படுகிறது. அதாவது லத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து பரிணாமம் அடைந்த ஆங்கில மொழி அதன் மூல சமூகத்திற்க்கு அதிகமான பரிணாம வளர்ச்சியை கொடுக்கும். ஆனால் ஆங்கிலத்தை அடித்தளமாக கொண்டு தற்போது உருவாகும் சமூகம் இரண்டாம் நிலையில் தான் சிந்திக்க நேரிடும்.

அதாவது மறைமுகமாக ஐரோப்பிய சமூகத்தின் ஆளுமை என்பது சிங்கப்பூர் சமூகத்தின் மீது உறுதிச்செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் சமூகத்திற்க்கான அறிவியல் என்பது ஐரோப்பிய சமூகத்திடமிருந்து தான் பெற வேண்டிய சூழலுக்கு நகரும்.

ஏனென்றால் உரையாடல் மொழி என்பது அந்த சமூகத்தின் வரலாறு,அறிவியல், சிந்தனை, அனுபவங்களை தலைமுறைகளுக்கிடையில் கடத்தும் காரணி...

இதுவொரு கூட்டு,பொரியல் சமூகம், தனக்கென்ற சுயமான பரிணாம வளர்ச்சியை இப்பொழுது தான் தொடங்கியிருக்கிறது. ஆகையால் இதன் வளர்ச்சியின் அடித்தளம் ஆங்கிலத்தின் வழியாக ஐரோப்பியர்கள் இருப்பதில் நமக்கென்ன வந்தது :(

என்னுடைய கவலையெல்லாம் பல தலைமுறைகள் வரலாற்றையும், அறிவியலை, சிந்தனைகளையும், அனுபவங்களையும் தனக்குள் சேகரித்து வைத்திருக்கிற தமிழ் மொழியும் அதன் சமூகமும்... இரண்டாம் நிலை சமூகமாக நகர்த்தப்படுவதை பற்றியது....

தொடரும்...

வியாழன், 30 அக்டோபர், 2008

மண்ணும், மண்ணின் வளங்களும் யாருக்கு...?

கிராமத்தின் மாலைப்பொழுதில் ஊரின் முக்கியபுள்ளிகள் பஞ்சாயத்து அலுவலகத்தின் மரத்தடியில் கூடியிருக்கிறார்கள். ஆங்காங்கே மணியக்காரர் முத்து மீதான குற்றச்சாட்டு என்பதால் பரப்பரப்பு அதிகமாகவே இருக்கிறது. மூன்று தலைமுறைகளாக ஊரில் பெரியமனிதர் என்கிற தோரணையில் இருப்பவர். இப்பொழுதுக்கூட அவரின் அண்ணன் மகன் தான் பஞ்சாயத்து தலைவர்.

என்ன அப்படி அவர் குற்றம் செய்துவிட்டார் என்று இங்கே கூடியிருக்கிறார்கள்? ஊர் பொது பூவரசு மரம் 50 ஆண்டுகள் பழமையானது... நல்ல வைரம் பாய்ந்த மரம் என்று தன் மகள் வீட்டு வேலைக்கு வெட்டி பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய அப்பா காலத்தில் ஊரில் பொது இடத்தில் நட்டது.

பஞ்சாயத்து தலைவர் அண்ணன் மகன் தானே சொல்லிக்கலாம் என்று வெட்டி விட்டார். தன்னுடைய சிற்றப்பா தானே என்று தலைவரும் விட்டுவிட்டார். ஆனால் ஊர்மக்கள் சும்மா விடுவார்களா? கூட்டிவிட்டார்கள் கூட்டத்தை...

பஞ்சாயத்து தலைவரான தான் பஞ்சாயத்து உறுப்பினர்களை கூட்டி பேசுவதாக ராமலிங்கம் சொன்னதற்க்கு, நீ சின்ன பையன், அதோட இது ஊர் பொது சொத்து அதனால் பெரியவர்கள் கூடி பேசுவதாக முடிவு செய்து விட்டரர்கள்.

ராமலிங்கம் தன் சிற்றப்பாவுடன் கூடி ஓரு முடிவுடன் கூட்டத்திற்க்கு வந்திருந்தார்.

கூட்டம் ஆரம்பித்தது ஆளாளுக்கு ஊர் பொது சொத்தை மணியக்காரர் அனுமதியில்லாமல் வெட்டியதை கண்டிக்க ஆரம்பித்தனர்.

சில முக்கிய மணியக்காரரின் நண்பர்கள் சமாதானமாக " மூனு தலைமுறையா ஊருக்கு உழைத்த குடும்பம்... அதனால நாம அடுத்து என்ன செய்வது என்று பேசலாமே!" என்றனர்.

மாரியம்மன் கோயில் குருக்கள் "அய்யாவின் அப்பாதானே அந்த மரத்தை நட்டார்...! அவருக்கு இந்த ஊருல எவ்வளவு மரியாதை இருந்தது. மணியக்காரருக்கு இந்த மரத்தை கூட அனுபவிக்க உரிமை இல்லையா?" என்றார்.

பெரமையா : " யோவ்! குருக்கள் வெள்ளி, செவ்வாய் மணியக்காரர் தட்டுல போடுற பத்து ரூபாய்க்கு விசுவாசமா போசாதீர்... சொத்து ஊருக்கு சொந்தம்!"

பெரியவர் : "பெரமையா! ராமலிங்கம் எலக்சென்ல உன்னை தோற்க்கடித்த கடுப்பில் எதையாவது பேசாத!"
(பெரியவருக்கு தெரியாது, குருக்கள் மணியக்காரரிடம் கோயில் நிலத்தில் உள்ள பனைமரத்தை வெட்டி வீட்டு ஓடு போட கோட்டார். மணியக்காரர் அதுக்கு சரியின்னு தலையாட்டினது தனி விசயம். இப்போ குருக்கள் மனதில் தனக்கு இனி பனைசொத்து இல்லை என்பதாலேயே வலிந்து மணியக்காரருக்கு பேசினார்)

பெரியவர் 2 :" யப்பா ராமலிங்கம் நீதானே பஞ்சாயத்து தலைவர்! என்ன பண்ணலாமுன்னு சொல்லு"

ராமலிங்கம் : "சிற்றப்பா ஓன்னும் சும்மா வெட்டலையே...!"

மக்கள் அப்படியா...! என்று வாயை பிளந்தது..

(முன்பே திட்டமிட்ட படி ராமலிங்கம் லாவகமாக திசைமாற்றினார்....)

ராமலிங்கம் : "அப்பா! முழுசுமா வெட்டின பிறகு ஆசாரியை வைத்து மதிப்பு போட்டு காசு பஞ்சாயத்து போர்டுக்கு கட்டியராதா சொல்லியிருக்கிறார்!"

(ஏன் முன்னாடியே மரத்தை ஏலம் போடலை என்று சிலருக்கு கேள்வியிருந்தாலும், ஏதோ பஞ்சாயத்துக்கு காசு வந்தா சரி என்று கலைந்தார்கள். நாளைக்கோ அப்புறமோ ஆசாரியை வைத்து ஓன்றுக்கு பாதி மதிப்பிட்டு பஞ்சாயத்து போர்டுக்கு மணியக்காரர் காசு கட்டி விடுவார்கள். மக்களும் அவரு போல உண்டா என்று போயி விடுவார்கள்.)

கூட்டம் கலைந்தாலும் கணேசன் தன் நண்பர்களுடன் மரத்தடியில் உட்கார்ந்து இன்னும் பேசிக்கிட்டிருந்தரர். ரொம்ப ஆவேசமாக....

கணேசன் : 30 வருசத்துக்கு முன்னாடி இவன் அப்பன் ஊர் சொத்தை கொள்ளையடித்த போது யாரும் கேள்விக்கேட்கக்கூட திரணியற்று இருந்தார்கள். இன்றைக்கு ஏதாவது கொஞ்சமாவது கேள்வி கேட்கிறார்கள். தங்களுக்கும் அதில் உரிமையிருக்கு என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

நண்பர் 1 : அதான் முடிந்து விட்டதப்பா இன்னும் ஏன் கோபமாயிருக்கே...?

கணேசன் : நம்ம ஊரு சொத்து பஞ்சாயத்து போர்டுக்கு சொந்தம் என்று கேள்விக்கேட்க தெரிந்த மக்களுக்கு... நம் மண்ணில் கிடைக்கும் எல்லா வளமும் அரசுக்கும் அதன் மூலம் மக்களுக்கும் சொந்தம் என்பதை எப்போது உணர்வார்கள் என்பது தான் என்னுடைய கோபம்.

நண்பர் 2 : யப்பா கணேசா! நீ என்ன சொல்ல வருகிற தெளிவா சொல்லு!

கணேசன் : "மண்ணில் இருந்து எடுக்கிற எஃகு(இரும்பு தாது), பெட்ரோலியம், மைக்கா, டைட்டானியம் போன்ற இயற்கை வளமும், அதன் மூலம் கிடைக்கிற வருவாயும் நமக்கு தானே சொந்தம் ... ?"

நண்பர் 1 : அட! ஆமாமப்பா....

கணேசன் : எஃகு தாது வை டாடா, பிர்லா காரணும், மைக்கா வை காரைக்குடி செட்டியாரும், கோதாவரி பெட்ரோலியத்தை அம்பானியும், இப்போ டைட்டானியத்தை டாடா வுக்கும் கொடுத்து அவர்களை பணக்காரர்களாக ஆக்கி விட்டுட்டு நீயும், நானும் கழனியில கஞ்சிக்கு மாரடித்துக்கிட்டிருக்கோமே...!

"உனக்கும், எனக்கும், இந்த மக்களுக்கும் சேர வேண்டிய செல்வத்தை தனிமனிதர்கள் கொள்ளையடிப்பதை தட்டிக்கேட்க வேண்டாமா...!"

நண்பர் 2 : " அட போப்பா... இந்த கூட்டம் போடுறதுக்கே இங்கன அவ்வளவு பிரச்சினை... யாரு இதெல்லாம் கேட்கிறது...?"

கணேசன் : " 30 வருசத்துக்கு முன்னாடி இதே கிராம மக்கள் மணியக்காரரை கேள்விக்கேட்க வில்லை... இப்பொழுது கேள்வி கேட்கிற நிலைக்கு மாறியிருக்கிறார்கள்... மக்கள் சிந்திக்க தொடங்குவார்கள்... இந்த அதிகார மையங்களை தகர்த்து.. எறிவார்கள்..!

" இந்த மண்ணின் வளம், செல்வம் எல்லாம் மக்களுக்கு சொந்தமென்பதை உணர்ந்து தங்களின் உரிமைக்காக போராடுவார்கள்!"

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

புவி வெப்பமடைகிறது - எல்லோரும் ஒரு நாள் பட்டினி கிடப்போம்...!

வெப்பம் வெளிப்படுகிற எல்லா வழிவகைகளையும் கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானிகள்... மனிதர்கள் உணவு உட்க்கொள்வதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றங்களால் மனித உடல் வெப்பத்தை வெளியேற்றுவதை கண்டறிந்துள்ளனர்.

இதனால் இந்தியா, சீனா மாதிரியான அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் உலகம் சூடாவதை தடுக்க எல்லோரும் ஒரு நாள் பட்டினி இருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்!

இதன் தொடர்பில் இந்தியாவில் உள்ள NGO - கள் ஒன்றிணைந்து வருகிற மாதம் முதல் தேதி பட்டினி கிடப்பது பற்றிய பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்...


மேலதிக தகவல்கள் விரைவில்....
Related Posts with Thumbnails