திங்கள், 10 நவம்பர், 2008

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!) - 2

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!)

ஓரு சமூகம் தனக்கான உரையாடல் மொழியை எப்படி கட்டமைக்கிறது என்பதை விளக்குவதற்க்காக சிங்கப்பூர் சமூகத்தை எடுத்துக்கொள்கிறேன்.

அரசின் முக்கிய அதிகார மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதன் வழியாகவே தலைவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். பெரும்பான்மை மக்களாகிய சீனர்கள் மாண்டரின் என்கிற சீன மொழியின் எளிமைப்படுத்தப்பட்ட பிரிவை பேசுகிறார்கள். மலாய், தமிழ் மொழிகளும் அதனதன் மக்களால் பேசப்படுகிறது.

ஆங்கிலம் அதிகார மொழியாக இருப்பதால் மக்கள் அப்படியே ஆங்கிலத்தை கரைத்துக்குடித்து ஆங்கிலேயர் போல் பேச முயற்சிக்கவில்லை. தங்களுக்கு ஏற்றார் போல் மொழியை வளர்த்தெடுக்கிறார்கள். "அங்கிள் டூ தே லா" என்பது சாதராண ஓரு கடைக்காரிடம் சிங்கப்பூர் வாசி உரையாடும் மொழி.

can என்கிற ஆங்கில வார்த்தை அதனுடைய மூல பொருளுடன் இங்கே கையாளப்படுவதில்லை. மாற்றாக இங்கே கேள்விச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

இதை ஐரோப்பியர்கள் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றனர் "singlish" என்று. ஓரு குறுகிய காலத்தில் உருவான சமூகம் தனக்கான உரையாடல் மொழியை தானாகவே கட்டமைக்கிறது.

இந்த ஸிங்கிலீஷ் ன் அடித்தளம் ஆங்கிலமாகவும், இரண்டாம் நிலை அடித்தளமாக மலாய் மொழியும். மூன்றாம் நிலையில் தமிழும், மாண்டிரினும் இருப்பதை உணர வேண்டியிருக்கிறது.

இந்த ஸிங்கிலீஷ் தான் சிங்கப்பூர் சமூகத்தின் உரையாடல் மொழியாக பரிணாமம் அடைகிறது. அரசு speak good english என்று நிகழ்வுகள் நடத்தி பார்த்தார்கள். ஓன்றும் வேலைக்காகவில்லை. சமூகத்தின் நகர்வை அதிகார மையத்தால் தடுக்க இயலாது. வேண்டுமானால் தள்ளிப்போடலாம்!

(இதனால என்ன சொல்ல வருகிறாய்! என்று நீங்கள் எதிரொலிப்பது புரிகிறது).

ஆங்கிலம் அடித்தளமாக இருப்பதால் இவர்கள் கற்றுக்கொள்கிற சொற்களின் வேர் லத்தீன், கிரேக்க மொழிகளின் அடித்தளத்தில் இருந்து வந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளாக சென்றால் கற்றுக்கொள்கிற ஓவ்வொரு சொல்லிலும், வழக்கு மொழிகளிலும், பழ மொழிகளிலும் ஐரோப்பியர்களின் வரலாற்று நிகழ்வுகளை, அறிவியலை, அனுபவங்களை மட்டுமே உள்வாங்குவார்கள்.

உதாரணத்திற்க்கு ஜீலை என்கிற மாதத்தின் பெயரை எடுத்துக்கொண்டால் உடனடி விளக்கமாக ஜீலியஸ் சீசர் பற்றிய வரலாறு விரியும்.

இரண்டாம் நிலை அடித்தளமாக மலாய் இருப்பதால் உள்ளூர் அறிவியலை உள்வாங்குவதற்க்கான வாய்ப்பு இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதில் என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பலாம்...

இங்கே சிந்தனை என்பது ஐரோப்பியர்களிடமிருந்து தான் கடன் வாங்கப்படுகிறது. அதாவது லத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து பரிணாமம் அடைந்த ஆங்கில மொழி அதன் மூல சமூகத்திற்க்கு அதிகமான பரிணாம வளர்ச்சியை கொடுக்கும். ஆனால் ஆங்கிலத்தை அடித்தளமாக கொண்டு தற்போது உருவாகும் சமூகம் இரண்டாம் நிலையில் தான் சிந்திக்க நேரிடும்.

அதாவது மறைமுகமாக ஐரோப்பிய சமூகத்தின் ஆளுமை என்பது சிங்கப்பூர் சமூகத்தின் மீது உறுதிச்செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் சமூகத்திற்க்கான அறிவியல் என்பது ஐரோப்பிய சமூகத்திடமிருந்து தான் பெற வேண்டிய சூழலுக்கு நகரும்.

ஏனென்றால் உரையாடல் மொழி என்பது அந்த சமூகத்தின் வரலாறு,அறிவியல், சிந்தனை, அனுபவங்களை தலைமுறைகளுக்கிடையில் கடத்தும் காரணி...

இதுவொரு கூட்டு,பொரியல் சமூகம், தனக்கென்ற சுயமான பரிணாம வளர்ச்சியை இப்பொழுது தான் தொடங்கியிருக்கிறது. ஆகையால் இதன் வளர்ச்சியின் அடித்தளம் ஆங்கிலத்தின் வழியாக ஐரோப்பியர்கள் இருப்பதில் நமக்கென்ன வந்தது :(

என்னுடைய கவலையெல்லாம் பல தலைமுறைகள் வரலாற்றையும், அறிவியலை, சிந்தனைகளையும், அனுபவங்களையும் தனக்குள் சேகரித்து வைத்திருக்கிற தமிழ் மொழியும் அதன் சமூகமும்... இரண்டாம் நிலை சமூகமாக நகர்த்தப்படுவதை பற்றியது....

தொடரும்...
Related Posts with Thumbnails