செவ்வாய், 31 ஜூலை, 2007

இன்னும் எதற்க்கு இந்திய இறையாண்மை என்கிற வேடம்!

என்று மாறும் இந்த நிலை....!

தஞ்சை மாவட்டமே காவிரி பிரச்சினையால் விவசாயம் நலிந்து ஒவ்வொரு விவசாய குடும்பத்து இளைஞர்களும் கூலி தொழிலாளர்களாக சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல கிராமங்களில் இளைய வயது ஆண்களே வீடுகளில் இல்லை என்கிற கேவலமான நிலைக்கு, கிராமங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.

நிலங்கள் இருப்பவர்கள் அதை அடகு வைத்து ஏஜெண்டக்கு பணம் கட்டி கூலிகளாக ஓடுகின்றனர். இல்லாதவர்கள் over stay என்று ஓடுகின்றனர். இன்னும் வறுமை, சமூக கொடுமைகளால் மிச்சம் இருக்கின்ற கிராம தொழிலாளர்கள் நகரங்களின் வீதிகளில் குடியேறிக்கொண்டிருக்கின்றனர்.

அறுபது ஆண்டுகால இந்திய அரசியல் அமைப்பால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை, இன்னும் எதற்க்கு இந்திய இறையாண்மை என்கிற வேடம்?.

டாலர்களில் சம்பாதித்து குடும்பத்தோடு கொட்டமடிக்கும் புண்ணாக்குகள் இந்திய இறையாண்மை பேசுகிறார்கள்.... ஆனால் எங்களின் வாழ்வியலே தொலைந்து போய்க்கிடக்கிறது... அதற்கு என்ன பதில் சொல்வார்கள்!

இன்னும் வரும்...

வியாழன், 19 ஜூலை, 2007

பாவமய்யா... இந்த இங்கிலாந்துகாரர்கள்...!

நம்ம மக்கள் தான் பழசையெல்லாம் மறந்துடுறாங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்! தங்களை உலகத்தையே ஆள பிறந்தவர்களுன்னு அறிவித்துக்கொள்கிற இங்கிலாந்துகாரர்கள் நம்ம கொண்டைபார்ட்டிகளுக்கிட்ட ஈசியா ஏமாந்துடுறாங்கப்பா!

பழைய வரலாறு தெரியுமா 80களில் இப்படிதான் இங்கிலாந்துகாரங்கவுக 'பத்மா' ன்னு ஒரு ஆட்டகாரியா ஆகா... ஓகோ...ன்னு தலையில தூக்கி வைச்சு ஆடுனாங்கப்பா! அந்த ஆட்டகாரி என்ன பண்ணுனா... இங்கிலாந்து மந்திரிசபையில இருக்கிற முக்கியமான ஆட்களை கவுத்து என்ன என்ன சித்து விளையாட்டிருக்கோ... அத்தனையும் ஆடுனா...

அப்புறமென்ன இங்கிலாந்துகாரர்களும் எங்க ராணுவ ரகசியம் ஓன்னும் பிரான்ஸ்-க்கு விற்கபடவில்லை என்று ஓரு வெள்ளை அறிக்கை தாக்கல் பண்ணிட்டு, ஆட்டகாரிய தூக்கி உள்ளற போட்டாங்க!

இப்போ ஷில்பா ஷெட்டி -ன்னு ஒரு ஆட்டகாரிய அழைச்சிட்டு போயிருங்காகோ.. என்ன நடக்க போகுதுன்னு பார்போம்.

ஆன ஓன்னு சொல்லனுமப்பா கொண்டைபார்ட்டிகள் உள்ளூரில் மட்டுமல்ல உலகளவில் நல்லாதான் ஏமாத்துறாங்கப்பா...!

நான் என்னத்த சொல்லுறது... நீங்களா பரர்த்து ஏதோ பண்ணுங்கப்பா!

புதன், 18 ஜூலை, 2007

சமூக குற்றவாளிகள்...!

இப்போ திடீரென்று எல்லோரும் சட்டத்தால் தண்டிக்கபட்டால் அல்லது நிரூபிக்கபட்டால் மட்டுமே ஓருவர் குற்றவாளி என்று ஜல்லியடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அப்போ ஓரினச்சேர்க்கையில் மாணவர்களை ஈடுபட துன்புறுத்திய, கடவுள் சக்தியால் செயின் வருகிறது என்று ஏமாற்றிய சாயிபாபா சட்டத்தால் தண்டிக்கபடவில்லை அதனால் அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்.

கொலை மற்றும் பல வழக்குகளில் தண்டிக்கபடாத ஜெயேந்திரர் என்கிற காலிபயல் மிகவும் நல்லவர்.

டான்சி வழக்கில் இது தப்புதான் பரவாயில்லை நீங்கள் மனச்சாட்சிபடி நடந்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கபட்ட ஜெயலலிதா தப்பே பண்ணாத உத்தமி!
(இப்படி ஓரு தீர்வு எப்படிதான் கொடுத்தார்களோ தெரியவில்லை, வேண்டுமானால் உலக வரலாற்றிலேயே முதல்முறையாக மொக்கையான ஒரு தீர்ப்பு என்று வைத்துக்கொள்ளலாம்)

நான் சென்னையில் இருக்கும்போது ஒரு நண்பர் இப்படிதான் சோனியாகாந்தி, ராஜீவ்காந்தியின் மனைவி அப்படியின்னு சொன்னா! உடனே எந்த புத்தகத்தில் போட்டிருக்கு என்பார். இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் அச்சடித்த காகிதத்தில் ஆதாரம் வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் குற்றவாளிகளை தண்டித்ததை விட மிக அதிக அளவில் பார்பானீயத்தை எதிர்த்த சமூக போராளிகளை தண்டித்ததே அதிகம்.

ரமேஷ் தண்டிக்கபடுவாரா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம் ஏனென்றால் எல்லா இடங்களில் பார்பானீயத்தை ஆதரிக்கிற அதிகார வர்க்கங்கள் இருக்கும்போது, எப்படி சட்ட ரீதியாக தண்டனை கிடைக்கும் என்பது தெரியவில்லை!.

செவ்வாய், 17 ஜூலை, 2007

என்று மாறும் இந்த நிலை....!

கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் வருவாய்துறை அலுவலகத்துக்கு (IRAS-Inland Revenue Authority of Singapore) போய் நம்ம பழைய முதலாளிக்கும் நமக்குமான பஞ்சாயத்தை முடித்துவிட்டு வரலாம் என்று போனேன். வரிசையில் நின்று வரிசைஎண் எடுக்க சென்றேன். அங்கிருந்த அலுவலக பெண்மணியிடம் நான் ஆங்கிலத்தில் என்னுடைய கோரிக்கையை விளக்கிக்கொண்டிருந்தேன், அவரும் வரிசைஎண் கணிணியிலிருந்து எடுத்துக்கொடுத்தார். இவ்வளவு நடந்துக்கொண்டிருக்கும்போது தூரமாக ஒரு இளைஞர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார், நான் அங்கிருக்கும் காத்திருக்கும் நபர்களுக்கான இருக்கைகளில் அமரவும், என்னருகில் வந்து அமர்ந்தார்... வலுவான உடல், களைப்பும், சோகமும் மண்டிய முகம், தாடி என்று மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.

மிக மெதுவாக அண்ணே! நீங்க தமிழா? என்றார்
ஆமாம்! என்ன சொல்லுங்க என்றேன்.
நாளைக்கு நான் ஊருக்கு போறேன் என்றார்.
எந்த ஊரு என்றேன்.. திருபத்தூருண்ணே என்றார்.
பேரு என்ன என்றேன்... குமார் என்றார்.
ஆமா! நாளைக்கு ஊருக்கு போறேன்னு சொல்லுருறீங்க! இங்க என்ன பண்ணிக்கிட்டுருங்கிங்க! போய் ஏதாவது வீட்டுக்கு சமான் வாங்க வேண்டியதுதானே அப்படியின்னு சொன்னேன்.
அவருக்கு கண்ணெல்லாம் கலங்கி தண்ணி வந்துடுமுங்கிற நிலை...
சரி! ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க என்ன பிரச்சினை அப்படியின்னு கேட்டேன்.

இரண்டு மாசமா சம்பளம் தரவில்லை... போகும்போது தருகிறேன் என்று முதலாளி சென்னான், இப்போ வருமான வரி கட்டியாச்சு அப்படின்னு சொல்லி மீதம் s$200 தான் கொடுத்தான். அதான் ஓன்னுமே புரியவில்லை.. என்ன செய்யுறதுன்னு! புள்ளைங்க, வீட்டுகாரி எல்லாம் எதிர்பார்பாங்க என்றார்.
என்ன பிரச்சினை ஏன் சம்பளம் தரவில்லை என்றேன்
வரி கட்டணுமுன்னு காச பிடித்து விட்டான் முதலாளி என்றார்.
எனக்கு ஒன்னுமே புரியவில்லை! உங்களுக்கு எப்படியா வரி வரும்!

ஏதாவது டாக்மெண்ட் இருக்கா என்று கேட்டேன்.பேசிக்கொண்டிருக்கும் போது மணி 10.30

அவர் அவருடைய சம்பள படிவத்தை தந்தார். வாங்கி பார்த்தால் இந்தாண்டுக்கான வரி என்று S$600+ வரி பிடித்தம் செய்திருந்தார்கள்.
அவர் தினக்கூலியாக கட்டிட கட்டுமான பணியில் வேலைபார்த்திருக்கிறார். ஒரு நாளைக்கு ஊதியம் S$18 அவர் மாதம் முழுவதும் வேலை பார்த்தால் S$540 கிடைக்கும்.
இந்த வேலைக்கு இந்தியாவில் ரூபாய் 1,50,000 ஏஜெண்ட்க்கு கட்டி வந்திருக்கிறார். எனக்கு வந்த கோபத்திற்க்கு அங்கே அவரை திட்ட ஆரம்பித்துவிட்டேன். அவர் அடுத்த அதிர்ச்சியை எனக்கு தந்தார், அவர் skill test தேர்ச்சி பெற்றவர் அதனாலேயே S$18 சம்பளம் மற்றவர்களுக்கு வெறும் S$14 மட்டுமே என்றார்.

சரி! நம்ம அப்புறம் அவரை பேசிக்கொள்ளலாம், இந்த வரி பிரச்சினையை தீர்ப்போம் என்று, அலுவகத்தில் பேசினீர்களா என்றேன், காலையிலே வந்துட்டேன்... அவங்க என்ன சொல்லுறாங்கன்னு எனக்கு புரியவில்லை என்றார்.
நீங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க.. என்று கேட்டார்.
சரி! உங்க முதலாளி என்ன சொல்லுறார் அப்படின்னு கேட்டேன். வரி கட்டிதான் தீரணும் அதனால ஒன்னும் பண்ண முடியாது அப்படின்னு சொல்லிட்டான் அப்படின்னார்.

அவரிடம் அவர் முதலாளி தொலைபேசி எண் வாங்கி என்ன சிக்கல் ஏன் வரி கட்டணும் என்று கேட்டால்? நீ யார் அதை கேட்க? என்று கோவப்பட, பிறகு வேறு வழியில்லாமல் நான், நீங்கள் சரியான பதில் தரவில்லை என்றால் நான் அவரை MOM(Ministry of ManPower) அழைத்து செல்வேன் என்று கூறினேன்.
பிறகு அவர் சில வரி விதிப்பு முறைகளை சொன்னார். கடைசியாக IRAS அலுவலகத்திலிருந்து கடிதம் வாங்கி வந்தால் பணம் தருவதாக ஓத்துக்கொண்டார்.

சிங்கப்பூர் விதிமுறைகள் இதுதான்
1. 90 நாட்களுக்கு அதிகமாகவும் 180 நாட்களுக்கு குறைவாகவும் ஓர் வரி விதிப்பு ஆண்டில் நீங்கள் வேலைபார்த்திருந்தால் 15% வரி கட்டவேண்டும்.
2. குறிப்பிட்ட தொகை வரை வருமான வரி விலக்கு இருக்கிறது.
3. பிறகு இன்ன பிற குட்டி சட்டதிட்டங்கள்

அவருடைய இந்தாண்டிற்க்கான வேலை 180 நாட்களுக்கு குறைவாக இருந்ததால் முதலாளி 15% சம்பளத்தை வரிக்கென்று பிடித்துவிட்டார்.
ஆனால் அந்த இளைஞருடைய ஆண்டு மொத்த வருமானம் 12*540 = 6480 + ஓவர் டைம் நிச்சயமாக வருமான வரி விலக்கு உயரெல்லையை தொடவே வாய்பில்லை.
ஆனால் இவருடைய வருமானம் வரி விலக்கு அளிக்கபட்ட உயரெல்லைக்குள்ளேயே இருக்கு என்பதை IRAS மட்டுமே சான்று தர முடியும்.
அந்த முதலாளி திட்டமிட்டு அவருடைய வருமான வரி படிவத்தை தாமதமாகவே பதிவு செய்து இருக்கிறார். அவருடைய கணக்கு இந்த இளைஞர் ஊருக்கு போனபின்பு அந்ததொகை அவர் எடுத்துக்கொள்வதே.

சரி! சூழ்நிலையை விளங்கிக்கொண்டு அலுவலகத்தில் அந்த இளைஞருடைய நிலையை விளக்கி ஒன்று நீங்கள் வரி கட்ட வேண்டியதில்லை என்று சான்று தாருங்கள் அல்லது இளைஞர் இங்கு தங்கி அந்த மீத தொகையை வாங்கி செல்லும் வரை தற்காலிக (ஸ்பெசல்) விசா தாருங்கள் என்று கேட்டேன்.

சீன பெண்மணி நிலைமை புரிந்துக்கொண்டு ஒரு மணி நேரத்தில் கடிதம் தருவதாக சொன்னார். மணி இப்போது 11.00
ஆனால் பாஸ்போர்ட் வேண்டுமென்றார். ஆனால் அந்த இளைஞரின் பாஸ்போர்ட் அந்த கம்பெனி போர்மென் எனப்படும் வேன் ஓட்டுநரிடமிருந்தது. அவரும் அந்த இளைஞரின் ஊர்தான். அவரிடம் பேசினால் நான் கம்பெனிக்கு தெரியாமல் பாஸ்போர்ட் தர முடியாது என்று அடம்பிடித்தார். கடைசியில் அவரை தனியாக அழைத்துச்சென்று கேட்டதில் கடைசிநாள் இன்று, குமார் மிகவும் வருத்ததில் இருப்பதால் பாஸ்போர்ட் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்றார்.
நான் வேண்டுமானால் என்னுடைய பாஸ்போர்ட், ஐசி தருகிறேன் வைத்துக்கொள், குமாருக்கிட்ட பாஸ்போர்ட் கொடு, அந்த கடிதத்தை வாங்கி வரட்டுமென்றேன்.
அப்படி வேண்டாமென்று நானே பாஸ்போர்ட் வாங்கி சென்று கடிதத்தை வாங்கி அனுப்பி வைத்தேன். அன்று சனிக்கிழமை கட்டுமான பணி அலுவலகம் எல்லாம் 1 மணியுடன் மூடிவிடுவார்கள். குமாரை உடனே சென்று அவருடைய முதலாளியிடம் கடிதத்தை கொடுத்து பணத்தை வாங்க சொல்லிவிட்டு பார்த்தால் என்னுடைய பஞ்சாயத்து வரிசைஎண் தவறிவிட்டது. அலுவலகம் பணி முடியும் நேரம். சரி! அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.

எனக்குள் எழுகிற கேள்வி அந்த இளைஞர் கட்டிவந்த தொகையை எடுக்க ஓராண்டுகள், உழைக்க வேண்டும் சேறு, தண்ணி இல்லாமல். அதற்கு அடுத்த ஆண்டு சம்பாதிக்கும் தொகையே அவருடைய சேமிப்பு, ஆனால் அந்த தொகையை அவர் சம்பாதிக்க கொடுக்கும் விலை மிக அதிகம், மிகவும் தரமற்ற உணவு உட்க்கொள்ளுதல், மிக மோசமான கண்டெய்னர் குடியிருப்பு, மிக கடினமான 16 மணி நேர வேலை என வேதனையை அனுபவிக்கிறார்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னவை, ஊருல விவசாயம் நல்ல இருந்த இங்கன வந்து ஏன் இப்படி துன்படுறோம் என்று!


அப்படியே வீட்டுக்கு வந்து அறை தோழர்களிடம் சொல்லி வருத்தபட்டால், இங்கபாரு தேவையில்லாததுக்கு எல்லாம் தலையைக்கொடுத்து நீ ஏன் துன்பபடுறே. வார இறுதி பார்ட்டி இருக்கு வர்றீயா என்றார்கள். போங்கப்பா! நான் வரவில்லை என்று அயர்ச்சியாய் அமர்ந்தேன்.
அதற்க்குள் இன்னொருவர் இது அவனவன் தலையெழுத்து நீ ஏன் வருத்தபடுறே! என்றார். இப்படி ஏதாவது சொல்லி தங்களை நத்தை ஓட்டுக்குள் சுருக்கிக்கொள்ளும் மனிதர்கள் என்றெண்ணினேன்.

அன்று தேயிலை தோட்ட தொழிலாளியாய் கப்பல் ஏறிய தமிழன், இன்று வேறு வடிவத்தில் அரேபிய பாலைவனத்திற்க்கும், மற்ற நாடுகளுக்கும் விமானம் ஏறிக்கொண்டிருக்கிறான் இன்னும் மோசமான தொழிலாளியாய்!

யார் இதற்கு காரணம்?
இதற்க்கு என்ன தீர்வு?

தமிழனின் வாழ்நிலங்கள் இரண்டு ஒன்று தமிழகம் மற்றொன்று இலங்கை.

இலங்கையில் சொந்த மண்ணிலேயே அகதிகளாய், உயிர் வாழ உத்திரவாதமின்றி தமிழர்கள்!

தமிழகத்திலோ தமிழிலில் வழிபாடு நடத்த நீதிமன்றபடிகட்டுகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறான் தமிழன்!

தமிழ் கல்விக்கு சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தன் சொந்த மண்ணிலேயே நடத்த வேண்டியிருக்கிறது!


வீசுகின்ற புயலில் சிக்காமல் தப்பி பிழைத்துவிட்டோம் என்றெண்ணி தங்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இருக்கிறது என்றெண்ணும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

நீண்ட வரலாற்று பின்னணி, ஆழமான மொழி, கலாச்சார செழுமை, வளமான பூமி எல்லாம் இருந்தும் தமிழினம் ஏன் இப்படி?...............தொடரும்

திங்கள், 16 ஜூலை, 2007

பயனாளர் கையேடும், தமிழும்....!

ஆசை, ஆசையாய் நாம் நம் வீட்டுக்கோ, உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு மி்ன்னணுவியல் கருவி (electronics equipment) வாங்கி கொடுக்கிறோம். இப்பொழுது வருகிற நவீன கருவிகள் ஏகப்பட்ட பயன்பாடுகளுடன் வருகிறது ஆனால் அவற்றுக்கான பயனாளர் கையேடுகள் (user manual) பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
நாம் வாங்கி தருகிற பொருட்களை நம் பெற்றோரோ அல்லது உறவினரோ பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கலை தீர்க்க முடியாமல் அருகில் இருக்கும் யாரவது ஒருவரை உதவிக்கு அழைக்கும் போது அவர்கள் தங்களுடைய அறிவு திறமைகளையெல்லாம் அதில் காண்பித்து கடைசியில் பேரீச்சை பழத்திற்க்கு விற்க்கும் நிலைக்கு பொருள் வந்துவிடுகிறது.
எளிய தமிழிலில் பயனாளர் கையேடு மிக அவசியமாகிறது.
அதற்க்காக நாம் என்ன செய்யலாம்? சீனா மாதிரி நமக்கு ஒரு நாடோ அல்லது அரசியல் அதிகாரமோ இருந்தால் நாம் கட்டாயம் சந்தைக்கு வருகிற பொருட்களின் நிறுவனங்களை மறைமுகமாக நம்முடைய தமிழ் மொழியில் கையேடு வேண்டுமென்பதை அறிவுறுத்தலாம்.
நதிநீர் வேண்டுமென்று கேட்டாலே நாய்களை விட கேவலமாக அடித்துக்கொல்லபடும் அளவுக்கு அரசியல் அனாதைகளாக இருக்கிற நிலையில்...
தமிழிலில் கையேடா!
முடியும்! இதற்க்காக நீங்கள் வீதியில் கொடிபிடிக்க வேண்டாம்! போராட்டங்கள்! தீக்குளிப்புகள் தேவையில்லை!

ஒரு எளிய வழி இருக்கிறது!

இன்றைய நிலையில் மின்னணு கருவிகள் பயனாளர் சந்தையில் மிகப்பெரிய நுகர்வோர் எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.
ஓவ்வொரு மின்னணு கருவி நீங்கள் வாங்கும்போதும், உங்களுக்கு அப்பொருளின் உத்திரவாதத்தை பதிவு (warranty card) செய்ய ஒரு விண்ணப்பமும், ஒரு கருத்து கணிப்பு படிவம் (feed back form) -ம் தரப்படுகிறது.
நீங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு ஒரு கேள்வியாக மேலதிக சேவையாக அந்நிறுவனத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள், அப்பொழுது நீங்கள் தவறாமல் எங்களுக்கு தமிழிலில் பயனாளர் கையேடு இருந்தால் நலம் என்றும், அப்படி இல்லாததால் அவர்களின் கருவிகளை பயன்படுத்துவது சிரமமாக உள்ளது எனவும், விரைவில் தமிழிலில் பயனாளர் கையேடு தருகிற நிறுவனப்பொருட்களையே வாங்க விருப்பபடுவதாக குறிப்பிடுங்கள்.

கருத்து கணிப்பு படிவம் இல்லாத நிலையில் நீங்கள் அந்நிறுவனத்திற்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்து உங்களுடைய பதிவு எண்ணை குறிப்பிட்டு நீங்கள் விரும்புகிற மேலதிக சேவைகளை குறிப்பிடலாம்.

என்னுடைய நண்பர் 'சாம்சங்' நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் இருக்கிறார், அவருடைய கூற்றுப்படி இவ்வாறு வருகிற பயனாளர் கோரிக்கைகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் உடனடியாக அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கும் என்கிறார்.மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் மிக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார்.

இதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்?

1. தமிழ் மொழிபெயர்பாளர்கள் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2. நமக்கு எளிய தமிழிலில் பயனாளர் கையேடுகள் கிடைக்கும்.

அன்பின் வலைப்பதிவர்களுக்கு,
தற்பொழுது நிறவனங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனையை இலக்கு வைத்து உற்பத்தியையும் மற்றும் பயனாளர் கருத்துகளையும் விவாதிக்கிற நேரம். நாம் நம்முடைய எதிர்பார்ப்புகளை கருத்து கணிப்பு படிவங்களில் தெரிவிப்பதன் மூலம் அவர்களை நம் பக்கம் திரும்ப செய்யலாம். ஓரே ஒரு நிறுவனம் கையேடு இவ்வாண்டு வெளியிட்டு விட்டால் மற்ற நிறுவனங்கள் வணிக போட்டியால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட ஆரம்பித்துவிடும்.

எங்களது நண்பர் வட்டாரங்களில் மின்னஞ்சல் வழியாக இக்கோரிக்கையை முக்கியபடுத்தி இதுவரை பத்துக்கு மேற்ப்பட்ட படிவங்களை 'சோன', 'சாம்சங்', 'கேனான்' நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டோம்.

நீங்களும் உங்கள் கரங்களை கொடுத்து வலு சேருங்கள்! எளிய தமிழிலில் பயனாளர் கையேடு கிடைக்க வழி செய்வோம்.



நன்றி!

ஞாயிறு, 15 ஜூலை, 2007

அறிவாளி கொழுந்தும், நானும்... அகழ்வு ஆராய்ச்சியும்...!











































































































































































































































 

  நம்ம ஊரு பட்டுக்கோட்டைங்கோ, அங்கன வருசத்துக்கு ஒரு முறை கலை இரவு நடக்கும். த.மு.எ.ச என்கிற அமைப்பிலிருந்து நடத்துவாங்க. பெரும்பாலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள் அன்றைக்கு நடக்கும்.



 

  நமக்கு கலை தாகம் எடுத்து நிகழ்ச்சிக்கு போகலாம் அப்படின்னு முடிவெடுத்து... யாரை துணைக்கு அழைக்கலாம் என்று தலையை பிய்த்துக் கொண்டதில் நம் நண்பர் அறிவாளி கொழுந்து ஞாபகம் வந்தது. ( இப்ப பானுப்ரியா, நக்மா... படம்ன்னா யாரை வேணும்னாலும் கூட அழைத்துக்கொண்டு போயிரலாம். ( பாவனா, ஸ்ரேயா ரசிகர்கள் மன்னிக்கவும். நான் இளமையாக இருந்த போது இவர்கள் தான் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்).


 

இது தோழர்கள் நிகழ்ச்சி...  நமக்கு உள்ளூர் செய்தியே விளங்காது. இதுல இவர்கள் சீனா, ரஷ்யா , வியட்நாம், கியூபா... அப்படின்னு வெளியூர் விசயமாவே பேசவாங்க அதனால கொஞ்சம் விவரமான ஆளா இருந்த நமக்கு சந்தேகம் வந்த கேட்டுகலாம் இல்லையா...!


 

  சரின்னு கொழுந்து வீட்டுக்கு போயி வாய்யா இந்த மாதிரி கலை நிகழ்ச்சி இருக்கு போகலாமுன்னு சொன்னேன். அவனும் நீ எதுவும் கோவப்படலைன்னா! நான் வரேன் அப்படின்னு கிளம்பிட்டான். இதுவரைக்கும் பேசாததை புதுசா நம்ம கொழுந்து என்ன பேசிர போறான் அப்படின்னு நானும் கூட கெளம்பி நிகழ்ச்சிக்கு போயிக்கிட்ருந்தோம்.



எப்படியும் முழு இரவு அங்கன இருக்க போறோம் நம்ம LNB ல சாப்பிட்டு போயிரலாம் அப்படின்னு உள்ளர போயி இரண்டு ஸ்பெசல் பூரியை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்...


நான் "கொழுந்து! தேங்காய் சட்னி வைச்சு பூரி சாப்பிட்டு பாரு ரொம்ப நல்லா இருககும்"
  (கொழுந்து ஒரு நக்கல் புன்னகை பூக்க)
  என்ன?
கொழுந்து "புண்ணாக்குல செய்த சட்னி நல்லாதான் இருக்கும்!"
நான் "என்ன? என்ன?? புண்ணாக்குலய!! சும்மா நக்கலடிக்கத!"
கொழுந்து "அப்புறம் பின்னாடி போயி பாரு! நான் தான் கை கழுவும் போது பார்த்தேனே தொட்டியில தேங்காய் புண்ணாக்கு ஊறிக்கிட்டு இருக்கு!"
 

வைச்சுட்டான்யா ஆப்பு! எனக்கு சாப்பிட்டது அப்படியே கொமட்டிக்கிட்டு வந்தது. அப்படியே எழுந்து வந்து நின்னுக்கிட்டிருந்தேன். நம்ம கொழுந்து முழு பூரியையும் பட்டாணியையும் நல்ல முழுங்கிட்டு வந்தான்.



சரி தண்ணீர் குடிக்கலாமுன்னு குவளையை எடுத்து தண்ணீர் குடித்து விட்டு வைக்க, நம்ம கொழுந்து எடுத்து குவளையை பார்க்க எனக்கு உள்ளுக்குள் அப்படியே புகைந்தது. மறுபடி ஒரு கேலி புன்னகை...




நான் "என்ன இப்போ?"
கொழுந்து

"இதுல என்ன எழுதியிருக்குனு பார்த்தியா?"


நான் "இல்லையே!"
  வாங்கி பார்க்க அதில் "இது LNB ல் திருடியது" என்று பாத்திர அச்சு பதித்து இருந்தார்கள். மறுபடி நம்ம கொழுந்து புன்னகைக்க என்னய்யா!?
கொழுந்து "சரி! சரி!! கோவப்படாத அப்புறம் பேசுவோம் வா!"
  அப்பாடி ஒரு வழியா நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு போயி சேர்ந்தாச்சு. "நந்தலாலா" என்கிற பேச்சாளர் காந்தியடிகளின் குச்சிக்கு குச்சி ஐஸ் விளக்கம் கொடுத்துக்கிட்டு இருந்தார். அப்படியே பேசிக்கிட்டே குஜராத் பூகம்பம், அகழ்வாராய்ச்சி எல்லாம் பத்தி பேசினார்.
நான் "கொழுந்து! நல்லா பேசறாருல்ல! "தேசம் எங்கே போயிட்ருக்குன்னு" எவ்வளவு வருத்தப்பட்டு பேசறார் பாரு!"
கொழுந்து "ஆமா! ஆமாம்! நம்ம தோழர்கள்கிட்ட கேளு போனவாட்டி எதோ காசு குறையுதுன்னு கூட்டத்துக்கே வரலையாம் !"
 

(அப்ப தான் நம்ம தோழர்கள் வேற துண்டுயேந்தி வந்துக்கொண்டிருந்தார்கள்.)



எனக்கு மண்டை குடைச்சல் என்ன நாம எதை சொன்னாலும் கொழுந்து உடனே ஒரு பதில சொல்றான். அப்புறம் என்னங்க எதுக்கெடுத்தாலும் ஒரு நொள்ளை இல்லை ஒரு சொட்டையின்னா என்ன பண்றது!



சரின்னு அப்படியே நிகழ்ச்சியை பார்த்துக்கிட்டேயிருந்தோம். நம்ம மதுரை சந்திரன் வந்தார். மக்கள் கவிஞரின் புகழ் பாடும் பாட்டு பாட ஆரம்பித்தார்...



"சும்மா கிடந்த சொல்லை எடுத்து சூட்சும மந்திரம் சொல்லி கொடுத்து...



.......



......



பட்டுக்கோட்டையின் பாட்டு - அது



பதினெட்டு சுவை கூட்டு...."



அப்படின்னு பாடிக்கிட்ருந்தார்... தீடீரென்று நம்ம கொழுந்து விழுந்து, விழுந்து சிரிக்கிறான். எனக்கு சரியான எரிச்சல்


நான்

"என்ன இப்போ? எதுவா இருந்தாலும் சொல்லிட்டு சிரி!"


கொழுந்து "சரி! சரி! கோவப்படாத! இந்த 'இது LNB ல் திருடியது ', 'பூகம்பம்', 'அகழ்வாராய்ச்சி', இந்த பாட்டு எல்லாத்தையும் ஒன்னா சேர்த்தேன் சிரிப்பு வந்துருச்சு!"
நான் " இதுல சிரிக்க என்ன இருக்கு!"
கொழுந்து " ஒன்னுமில்லை தான்! இப்படி நினைச்சு பாரு இப்ப இங்கன பூகம்பம் வந்து நாடு, நகரம், மக்கள் எல்லாம் பூண்டோடு அழிந்து போயிடுறாங்க... அப்புறம் ஆயிரமோ, இரண்டாயிரமோ ஆண்டுகள் கழித்து மனிதர்கள் இந்த இடத்த அகழ்வாராய்ச்சி செய்யும் போது நீ தண்ணீர் குடித்த அந்த குவளையும், இந்த பாட்டும் கிடைத்தால்... அவர்கள் என்ன வரலாறு எழுதுவர்கள் நம்மை பற்றி என்று நினைச்சேன் சிரிச்சேன்..."
நான் "என்ன எழுதுவாங்க இந்த இடத்துல வாழ்ந்த மக்கள் எவர்சில்வர் என்ற உலோகத்தை பயன்படுத்த தெரிந்திருந்திருக்கிறார்கள். அப்பொழுது மாபெரும் கவிஞன் இருந்திருக்கிறான் அவனை பாராட்டி கவிதை எழுதி இருக்கிறார்கள. என்று எழுதுவார்கள்..."
கொழுந்து "அப்படியா!"
நான் "பின்ன வேற என்னய்யா எழுதுவாங்க!"
கொழுந்து "எனக்கு வேற மாதிரி தோணுது!"
நான் "என்ன தோணுது!"
கொழுந்து "இங்கு வாழ்ந்த மக்கள் திருட்டை தொழிலாக கொண்டிருந்தாலும்.. நேர்மையாக, நாணயமாக அந்த பொருள் எங்கே திருடப்பட்டது என்பதை அச்சிட்டு வைத்திருந்திருக்கிறார்கள்!" அப்படின்னு எழுதுவாங்க. அப்புறம் அந்தபாட்டுல முதல் வரியை சொல்லு..."
நான் "சும்மா கிடந்த சொல்ல எடுத்து சூட்சும மந்திரம் சொல்லி கொடுத்து....."
கொழுந்து "அக்காலத்தில் ஒருத்தர் இருந்திருக்கிறார் சொற்களுக்கே மந்திரம் சொல்லி கொடுத்திருக்கிறார்... அப்படின்னுல எழுதுவாங்க!" எல்லாரும் கைத்தட்டுனாங்கல அந்த என்னமோ சுவைன்னு ஒரு வரி... அத சொல்லு..."
நான் "பட்டுக்கோட்டையின் பாட்டு - அது பதினெட்டு சுவை கூட்டு..."
கொழுந்து "தமிழ்ல்ல சுவை எத்தனைப்பா?"
நான் "ஆறு சுவைகள்"
கொழுந்து "இத படிச்சிட்டு என்ன எழுதுவாங்க அக்காலத்திலிருந்த மக்கள் பதினெட்டு சுவைகளை அறிந்திருக்கிறார்கள்" என்று அல்லவா எழுதுவாங்க..."
நான்

"இப்ப என்ன சொல்ல வர நீ!"


கொழுந்து "நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் நீயே சிந்தித்து பாரு!"
 

(இப்படியாக எங்கள் கலை இரவு முடிந்தது. விடியல் வந்து விட்டது வீட்டுக்கு போறோம்.)




வெள்ளி, 13 ஜூலை, 2007

பழைய இரும்பு, ஈயம், பித்தளைக்கு பேரீச்சம் பழம்...!

இப்போதைக்கு தலைப்பு மட்டும் தான்!

வியாழன், 12 ஜூலை, 2007

கனவும், நிகழ்வும்...

கண்ணாடி துகள்களின் மீது காலில் காயமில்லா கனவு பயணம்...
நிகழ்வுகளால் நிர்மூலமாக்கபடும் நிமிடங்களில் நரம்புகள் அறுந்து விட துடிக்கிறது!
கண்களில் கண்ணீர்துளி எட்டிபார்க்கிறது வந்து விழட்டுமா என்று!
சிந்தனையின் வீச்சில் எழும் வெப்பத்தால் மண்டை ஓடு கொதிக்கிறது!
எல்லா கனவுகளின் பயணமும் இப்படிதான் இருக்கிறது...

*********************************************

என் நினைவுகளில் பொதிந்தவை எல்லாம் நிகழ்வுகள்...
நிகழ்வுகளில் கற்பதையே கடமையாக கொண்டேன்...
காலவெளியில் கடந்து செல்ல கற்கிறேன்...
இது இறந்தபின்பும் இருக்கும் போராட்டம்...
இங்கே இருப்பு என்பது நிகழ்வில் வாழ்வது!
வாழ்வதோ காலவெளியில் கடந்து பயணிப்பது!

செவ்வாய், 10 ஜூலை, 2007

நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்...!

1999 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைக்கு வேலைத்தேடி வந்திருந்தேன். கணிணி பயிற்றுவிப்பாளர் வேலைக்கு போன இடத்தில் எல்லாம் communication skill சரியில்லை என்று விரட்டியடித்தார்கள். ஆங்கிலத்தில் சரளமாக பேசினால்தான் தொடர்புக்கொள்ள முடியுமா? நான் தமிழிலில் விடாம பேசுவேன் என்று சொல்ல நினைத்தேன்! என்ன பண்றது வேலை வேணுமே! ஒரு வழியா அலைந்து திரிந்து அடையாறுல்ல ஒரு நிறுவனத்தில் நம்ம 'சி' பாயிண்டர் திறமையெல்லாம் விளக்கி வேலையை வாங்கியாச்சு.
தினந்தோறும் 147 பேருந்துதில் தான் முகப்பேர்-லிருந்து அடையாறு போகணும், வரணும் அப்படி போய் வந்துக்கிட்டு இருந்தபோது, ஒருநாள் தி.நகர் பேருந்து நிலையத்துக்கு கொஞ்சம் முன்னாடி அந்த கண்ணம்மாப்பேட்டை சந்து தொடங்கிற இடத்துக்கிட்ட பேருந்தை நிறுத்திட்டாங்க... நானோ ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.

என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பார்த்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம், ஓரே இரைச்சல், சற்று உற்றுப்பார்த்ததில் அப்பொழுது தான் ஒரு மனிதனை வெட்டியிருக்கிறார்கள. காலில் ஒரு வெட்டு, கழுத்தில் ஒரு வெட்டு நரம்புகள் அறுந்து வெள்ளையாய், இரத்த நாளங்களிலிருந்து பச்சை இரத்தம் வடிந்துக்கொண்டிருக்கிறது.

ஓரு பெண் தன் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அழுது புரண்டுக்கொண்டிருக்கிறாள். அவளை சிலர் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றனர்.
நான் சட்டென அந்த மனிதனின் கண்களை பார்க்கிறேன். யாராவது வந்து தன்னை காப்பாற்ற மாட்டார்களா என்கிற கடைசிநேர கெஞ்சலா! இல்லை முடிந்தது இனி எதுவுமில்லை என்கிற வெறுமையா! இல்லை!இல்லை!! உயிர் போனதால் உறைந்து போயிருக்கிறதா!
சிறிது நேரத்தில் போக்குவரத்து சரியாகி அறைக்கு வந்தாகிவிட்டது. அடுத்தநாள் செய்திதாளில் கண்ணம்மாப்பேட்டையில் கேபிள் ஆப்ரேட்டர் மோகன் வெட்டி படுகொலை என்கிற வழக்கமான சிறிய கட்டத்தில் செய்தியும் வந்து விட்டது.
ஆனால் அந்த கண்கள் என்னுள்ளே எழுப்பிய கேள்வி இங்கே உயிர் வாழ்வதற்க்கே உத்திரவாதமில்லையா!
நான் அடிக்கடி நினைத்துக்கொள்வது...

நம் சட்டங்கள் பேச வேண்டுமானால்
ஷரிகாஷாக்கள் சாக வேண்டும்
அதற்கு ஊடகங்கள் ஊக்க மருந்து கொடுக்க வேண்டும்

சட்டம் செயல்பட வேண்டுமானால்
விலை அதிகம் கொடுக்க வேண்டும்
இல்லையென்றால் ஊமை சாட்சியாய் சட்டங்கள்!

இங்கே நல்ல தலைவன் யாரென்றால்
சில சீக்கிய குழந்தைகளையும், குடும்பங்களையும்
தீயிலிட்டு எரித்திருக்க வேண்டு்ம்
அப்போது தான் பிரதமர் பதவி உடனே கிடைக்கும்!

இங்கே ரத யாத்திரை நடத்தி
ரத்த வெள்ளத்தில் நடந்து வர வேண்டும்
அப்பொழுது தான் மக்கள் உங்களை மலையிட்டு 'ஜி' என்பார்கள்!

கொஞ்சமாவது கொலைகள் செய்தால் தான்
அரியணைகள் கிடைக்கும்!

மக்களே! கொலைக்காரர்களுக்கு அரியணையை கொடுத்து விட்டு
நாளை நாம் கொலை செய்யபடுவோம் என்றே வாழ்கின்றீர்களே!

(குறிப்பு : ஷரிகாஷா இளைஞர் காங்கிரஸாரின் இளமை ஆட்டத்துக்கு பலியான ஓரு மாணவி. இந்தக்கொலைக்கு பிறகு தான் ஈவ்டீசிங் சட்டம் பேச ஆரம்பித்தது.)

எனது நண்பர்களின் முயற்சியில்....

திங்கள், 9 ஜூலை, 2007

மீனா! பைத்தியகாரியா.....!

ஏதோ! நகர வாழ்க்கையில் இயங்கிக்கொண்டிருந்தாலும், எனக்கு எப்போதும் கிராமத்துக்கு போறது நிரம்ப பிடித்தமான நிகழ்வு. அப்படி ஒரு நண்பரின் கிராமத்துக்கு சென்றேன். நண்பரும் என்னை பேருந்து நிலையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் அவருடன் அழைத்து சென்றார். வழி நெடுக வயல்கள், தென்னெஞ்சோலைகள் மனத்திற்க்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

ஊருக்குள் நுழைந்து விட்டோம்... ஒரு பார்க்க அழகான பதினைந்து அல்லது ஒரிரு வயது கூட குறைய இருக்கலாம் அப்படியான அழுக்கான உடை அணிந்த பெண்;வீதியில் போகிற, வருகிற எல்லா ஆண்களையும் தன்னோட படுக்க வரும்படி அழைத்துக்கொண்டிருந்தாள். திடீரென்று அப்பெண் என் நண்பரின் வண்டியை கண்டதும் விலகி விட்டாள்.

சிறிது நேரத்தில் எங்கிருந்தோ ஒரு பெண் (அவளுடைய தாய் என்று பின்னர் அறிந்து கொண்டேன்) வந்து அடித்து இழுத்து சென்றுக்கொண்டிருந்தார். மனதை ஏதோ உறுத்த நண்பரிடம் யார் அந்த பெண்? என்று வினாவினேன். அவர் விடு பிறகு பேசலாம் என்றார். நான் விடாபிடியாக இருந்ததால் அவர் சொல்ல ஆரம்பித்தார்...

"மீனா! கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த ஒரு பருவப்பெண், பார்ப்போரை மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் வசீகரம் உடல் வனப்பில், ஆனால் பாவம் ஒரு தோப்புக்குடியின் மகளாக பிறந்திருந்தாள்".
(தோப்புக்குடி- பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னந்தோப்புகளில் வேலைகாரர் குடும்பத்துடன் குடில் அமைத்து அந்த தோப்பின் முதலாளிக்கு எல்லா வேலையும் குடும்பமே செய்யும்)

அவள்! அந்தகிராமத்தின் அதிகார வர்க்கங்களை நன்றாக அறிந்திருந்தாள், அதனாலயே மிகவும் எச்சரிக்கையாகவே நடந்துக்கொள்வாள். ஆனால் வாலிப கழுகுகள் வட்டமிடுவதை நிறுத்தவில்லை.

பத்தாம்வகுப்பு தேர்வு விடுமுறை அவளுக்கு மிகப்பெரிய ஆபத்தை வரவழைத்தது. அவ்வூர் பூசாரி மகனின் காதல் வலையில் வீழ்த்தப்பட்டாள். காதல் வேளாங்கன்னி விடுதி வரை சென்றது.

அங்கேதான் அந்தபாதகனின் சதி ஆரம்பமாகியது தான் மட்டும் காதலன் என்றால் ஊரர் மிரட்டி தனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்றெண்ணி, தனக்கு பழக்கமான ஆதிக்க சாதியின் ஒரு நபருக்கு போட்டுக்கொடுக்கிறான். அந்த நபர் அவளை மிரட்டி அனுபவித்திருக்கிறார்.

இப்படி ஆரம்பித்து, ஒவ்வொருத்தராக அப்பெண்ணை மிரட்டி அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

நண்பருடைய கூற்றுப்படி ஒருக்காலகட்டத்தில் 15லிருந்து 50 வயது இருக்கும் அந்த கிராமத்து ஆண்களில் முக்கால்வாசி பேர் அவளை 3 மாதங்களில் சிதைத்திருக்கின்றனர்.

வலி, வேதனை, அவமானம் அத்தனையும் அப்பெண்ணை பைத்தியமாக்கியதா! அல்லது இக்கழுகுகளின் கைகளிலிருந்து விடுபட பைத்தியமாக நடிக்கிறாளா!
இதில் கொடுமை அப்பெண் மனநிலை சரியில்லை என்கிற நிலையிலும் சிலபேர் சோப் வாங்கிக்கொடுத்து குளிக்க வைத்து அனுபவிக்கின்றனர் என்கிற உண்மை.

மீண்டும் ஒருமுறை அந்த நண்பரை சந்தித்தபோது அறிந்துக்கொண்டது அக்குடும்பமே மொத்தமாக தற்கொலை செய்துக்கொண்ட செய்தி.

வறுமையும், ஏழ்மையும் எங்களோட இருந்தாலும்...
கால் வயிற்று கஞ்சிக்கு... கடின உழைப்பை தந்து தானய்யா வாழுறோம்!
எங்கள மானத்தோட வாழக்கூட விடலைன்னா! எங்கய்யா போவோம்!
அந்த தாயும், தந்தையும் கடைசியாக இப்படி நினைத்திருப்பார்களோ!


கிராமங்களில் ஆரம்பித்து, காவல் நிலையத்திலிருந்து, இராணுவம் வரை காம வெறி பிடித்த மிருங்கள் வாழும் நாடாக!

ஓ! இவர்கள் இப்படி இருப்பதால் தான் யாரை அம்மா! என்று அழைப்பது என்றுக்கூட அறியாமல் போனார்களோ!

ஞாயிறு, 8 ஜூலை, 2007

யாரந்த அறிவாளி கொழுந்து....!

உலகத்தின் தட்பவெப்பநிலை வேகமாக உயருகிறது. சமீபகாலமாக சுற்றுசூழல் ஆர்வலர்களால் மிக அதிகமாக அலசப்படுகிற விவகாரம். நம்ம வலைப்பதிவில் கண்மணியக்கா எழுதியிருந்தாங்க அப்புறம் சர்வேஷன் 30 வருடம்தானே என்று வருத்தப்பட்டார்.

எனக்கு தட்பவெப்பநிலை என்பதன் அடிப்படையிலேயே பிரச்சினை. அதுவும் ஒரு முறை ஊட்டி போனேன் அதிலிருந்து ஒரு கேள்வி மண்டைய குடைந்துக்கொண்டேயிருக்கு. நமக்கு தெரிந்த, அறிந்த மக்களிடம் எல்லாம் கேட்டாச்சு சரியான விடை கிடைக்கவில்லை...

ஆகையால் எனக்கு அடிப்படையில் இருக்கிற சந்தேகத்தை இங்கே வலைப்பதிவு அறிஞர் பெருமக்களுக்கு கேள்வியாக வைக்கிறேன். யாரேனும் எனக்கு விளங்கும்படி சொன்னால் கொஞ்சம் என்னோட அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

பொதுவாக வெப்பத்தை உருவாக்கும் ஒர் இடத்தை வெப்ப மூலம் (Heat Source) என்பார்கள். வெப்பத்தை உணரும் பொருளை (Heat Observer) நாம் இங்கே பொருள் என்று வைத்துக்கொள்வோம்.









இப்ப மேலே உள்ள படத்தில் பார்த்தீர்களானால் Object B ஆனது அதிக வெப்பத்தை பெறும் ஏனென்றால் அது Object A ஐ விட வெப்ப மூலத்திற்கு அருகில். (distance y is less than x)

பொதுவான விதி வெப்ப மூலத்திலிருந்து தூரம் குறைய, குறைய பொருளானது அதிக வெப்பத்தை பெறும்.










இப்போ நம்மோட கேள்விக்கு வருவோம். நீங்கள் இப்போது கடல் மட்டத்தில் இருக்கிறீர்கள் அப்போது சூரியனிடமிருந்து 'q' தொலைவிலிருந்தால் நீங்கள் உணரும் வெப்பநிலை. மலைகள் மேலே செல்லும் போது சூரியனிடமிருந்து 'r' தொலைவிலிருந்தால் நீங்கள் உணரும் வெப்பம்நிலை குறைவதேன்.

உண்மையில் 'r' ஆனது 'q' ஐ விட சூரியனிடமிருந்து தொலைவு குறைவு. பொது விதிப்படி வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும் ஆனால் குறைகிறது.
(r is less than q)

ஏற்கனவே நண்பர்களால் அறிந்த காரணங்கள் என்னால் ஏற்றக்கொள்ள முடியாதவை

1. கடல் மட்டத்திலிருந்து உயரம் செல்ல செல்ல வெப்பம் குறையும்

என்னுடைய மறுப்பு : அப்படியானால் திருச்சி மலைக்கோட்டை கடல் மட்டத்திலிருந்து உயரம் தான் ஆனால் வெப்பநிலை குறைவாக இல்லை. இது போல உலகத்தில் பல உயரமான இடங்கள் அதிக வெப்பநிலையோடு இருக்கின்றன.

2. பூமியின் சாய்வு கோணம்

என்னுடைய மறுப்பு : இது துருவங்களுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம் மற்றபடி ஒரே அட்சரேகையில் (Latitude) இருக்கும் இடத்துக்கு பொருந்தாது

3. வளிமண்டல அழுத்தம்

என்னுடைய மறுப்பு : வளிமண்டல அழுத்தம் தட்பவெப்பநிலை பாதிக்கும் ஒரு பக்க காரணி அதுவே மூல காரணி அல்ல.


சரி! இதற்குமேல் நீங்கள் ஆட்டத்தில் பங்கெடுத்து உங்கள் விடைகளை பகிர்ந்துக்கொள்ளவும்.

ஆட்டத்திற்க்கான அழைப்பிதழ்

தேசியவாத இந்தியர்களே
தேசியவாதமல்லாத இந்தியர்களே
திராவிடர்களே
ஆரியர்களே
தமிழர்களே
திராவிடத்தமிழர்களே
உள்நாடு,வெளிநாடு வாழ் தமிழர்களே
தோழர்களே
தோழருக்கு தோழர்களே
சங்கத்து சிங்கங்களே (ஆண்பால்)
சங்கத்து சிங்கிகளே (பெண்பால்)
கும்மியடிப்போரே
கும்மியை குத்தவைத்து வேடிக்கைப்பார்ப்போரே
வலைப்பதிவோரே
வலைப்பதியாதோரே

இருங்க! இருங்க!! அங்கன வாசல்ல யாரோ மாதிரி தெரியுது. அட நம்ம உறவுகாரவுகதான். அவுங்களும் தமிழர்கள்தான் ஆன எப்போதும் கொஞ்சம் மாப்பிள்ளை முறுக்கோடதான் இருப்பாக...

இசுலாமிய தமிழர்களே
ஈழத்தமிழர்களே

மற்றும் அழைப்பில் விடுபட்டோரே

அனைவரும் பங்கெடுத்து ஆட்டத்தை சிறப்பாக கொண்டுச்செல்ல வேண்டுகிறேன்!

புதன், 4 ஜூலை, 2007

அமெரிக்க வீரர்களுக்கு விளக்கு பிடிக்கும் ஆட்சியாளர்கள்...

கப்பல் வருது! கப்பல் வருது!! கப்பல் வருது!!!
நம் மானம் கப்பல் ஏறுது! கப்பல் ஏறுது!!!
மக்கள் காவலர்களா! - இல்லை
அமெரிக்கர்களின் கட்டில் விளையாட்டு காவலர்களா!!
தன்மானம் காக்கும் தமிழின தலைவர்களா!
டாலருக்கு தலையணை விசிறிகளா!!
மாடல் அழகிகள்... அமெரிக்கர்களின் மஞ்சத்து விளையாட்டுக்கு!
துணை நடிகைகள்... அமெரிக்கர்களின் உல்லாசத்துக்கு!
தமிழகத்தின் தலைநகரமா! - இல்லை
டாலர் ஏவலாளிகளின் (மாமாக்களின்) கூடாரமா!!

மக்களே! டாலருக்கு விலைபோன இந்த கயவர்களால் - நாளை
கல்லூரிக்கு போன சகோதிரியை காணவில்லை!
வேலைக்கு போன மனைவியை காணவில்லை!
கடைத்தெருவுக்கு போன தாயை காணவில்லை! -என்று
கதறி கண்ணீர்விட்டு பயனில்லை... விழித்தெழுங்கள்...
தன்மானம் காக்க!

அன்பின் சகோதிரிகளே!
விளக்குமாறு(துடைப்பம்) தயாராக வையுங்கள்...
உங்கள் உடன்பிறப்புகள் விளக்கு பிடிக்க போயிருக்கிறார்கள்...
நாளை வருவார்கள் ஓட்டு பிச்சை எடுக்க -அப்போது தேவைப்படும்...
நாட்டில் குப்பைகள் அதிகரித்து விட்டது... தூய்மை பணிக்கு தேவைப்படும்!
Related Posts with Thumbnails