செவ்வாய், 29 ஏப்ரல், 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2

குறிப்பு : கலாச்சாரம் (பண்பாடு) என்பதைப்பற்றிய விளக்கம் கொடுப்பதோ! பெண்ணியத்திற்கு போராடுவதாக ஜல்லியடிப்பதோ இப்பதிவின் நோக்கமல்ல! எனக்குள் எழுந்த, எழுகிற முரண்களின் குழப்பங்கள் மட்டுமே... இனி!


கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.

அப்படியாக நம்முடைய கலாச்சாரம் என்று கட்டியழுகிற எல்லாவற்றையும் வளர்ச்சியின் போக்கில் விட்டுவிட்டு நாம் மாறிக்கொண்டேதான்யிருக்கிறோம். இந்த மாற்றங்களின் காரணிகளாக (சூழல், அரசியல் அதிகாரங்கள், தேவைகள், இன்ன பிற) இருக்கின்றன!

ஆனால் இன்றைக்கு கலாச்சாரம் என்று கத்திதீட்டப்படுகின்ற நிகழ்வு ஒன்றேயொன்றாக தான் இருக்கிறது!. அது பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு.

கையால் சாப்பிடுவது கரண்டியால், குச்சியால் சாப்பிடுவதாக மாறினால் ஏற்றுக்கொள்கிறோம். தைக்காத ஆடைகள், தைத்த ஆடைகளாக (அரைக்கால், முழுக்கால் உடை) மாறுவதையோ, கைலியாக மாறுவதையோ மறுக்கவில்லை. தென்னைவோலை!, பனவோலை குடிசைகள் நவீன கன்கிரீட் கட்டிடங்களாக மாறுவதை மறுக்கவில்லை!

ஆக வாழ்வியலின் எந்ததெந்த கூறுகள் மாறினாலும் நாம் கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடவில்லை!

நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே! இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்... அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது! இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் :(

இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது. உடையின் தெரிவுகளை பற்றிய உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) பதிவை வாசிக்கவும்.

டிபிசிடி-ன் பதிவில் கல்வெட்டு சொன்னது "
1.ஆடை எப்படி உடுத்த வேண்டும் என்பது தனி ஒருவரின் உரிமை.

2. உடுத்தப்பட்ட ஆடை மறைக்காத பாகங்களை அவர்களே விரும்பி பார்வைக்கு வைக்கிறார்கள் என்பதுதான் எனது புரிதல். உதாரணம். ஜாக்கெட்டின் முது பாகம்/ஜன்னல் மினி ஸ்கர்ட் காட்டும் கால், தாவணி மறைக்காத இடுப்பு.... etc.. .

3.ஆடைகளால் மறைக்கப்பட்ட பாகங்களை ஆடையை விலக்கி பார்க்க முனைவதும், நேர் பார்வையில் படாத பாகங்களை கோணல் பார்வையில் பார்க்க முற்படுவதும் கேவலம் என்பதறிக.

"

உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது! சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.

தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்யும்போது மேலாடை அணிவதில்லை! அதே சமயம் வீட்டிற்கு வெளியாட்கள் வருகின்ற போது குறைந்தபட்சம் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொள்கிறோம்! நமது சொந்தங்களுடன் வீட்டிற்குள் இருக்கும் போது உடைகள் எப்படியிருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை!

இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்... பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்... ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை!


ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம்.

இங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன.

பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்... எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?

எ.காட்டிற்கு: இடுப்பில் இருந்து எத்தனை அடி உடை பாலுணர்வை தூண்டும் (தூண்டாது) :(

இதில் இன்னொரு இடியாப்ப சிக்கல் இருக்கிறது பாலுணர்வின் இருக்கூறுகளாக இருக்கின்றன... அழகுணர்ச்சியும், ஆபாசமும்....

எதை அழகுணர்ச்சி என்பது? எதை ஆபாசம் என்பது?

பி.கு: நீங்க ஜனரஞ்சகமாக எழுத(குழப்ப)மாட்டீர்கள் என்று சொன்ன டிபிசிடிக்கு இப்பதிவு அர்ப்பணிப்பு!

வியாழன், 24 ஏப்ரல், 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

பார்வை ஒன்று!

நான் கலாச்சாரக் காவலனா .....? :புதசெவிபதிவில் கலாச்சாரத்தை பற்றிய கேள்வியெழுப்பியிருக்கிறார்... கலாச்சார கண்றாவியை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். பதிவின் பின்னூட்டத்தில் கல்வெட்டு ஒரு அற்புதமான விவாதத்தை கட்டமைத்து சென்றிருக்கிறார்.

உடையை தீர்மானிக்கும் காரணிகளாக எவை,எவையிருக்கின்றன இன்றைக்கு என்பது முக்கியமான விவாதப்பொருளாக இருக்கிறது.

நிர்வாணமாக அலைந்த மனிதன் உடையை தேர்ந்தெடுக்கும் காரணிகளாக பாலுணர்வும், இயற்கையும் (சூழலும்) இருந்திருக்கலாம்!

மனித இன வளர்ச்சியில் உடையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இயற்கை(சூழல்) இருந்திருக்கிறது... எ.கா (சவுதி அரேபியாவின் வெள்ளையுடை தேர்வு, ராஜஸ்தான் தான் போன்ற பகுதிகளில் தலைபாகை, துருவப்பகுதிகளின் தோலாடை தேர்வு... போன்றவை...)

மனிதனின் உடையை தீர்மானிக்கும் காரணிகளாக சமூக, அரசியல் இருந்திருக்கலாம் எ.கா( குறிப்பிட்ட இனக்குழு ஒரே மாதிரியான உடையணியும் பழக்க, வழக்கத்தை பின்பற்றி இருக்கிறார்கள் ரோமானியர்களின் உடையமைப்பு, கிரேக்கர்களின் உடையமைப்பிலிருந்து வேறுப்பட்டிருந்தது.)

மனிதனின் உடையை தீர்மானிக்கும் காரணியாக மதங்கள் ஆளுமை செலுத்துக்கின்றன... எ.கா (இசுலாமியர்கள் உடை, பெளத்தர்களின் உடை...)

இவையெல்லாம் கடந்த காலங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன... சூழல், சமூக, அரசியல், மத காரணிகள் உடை தேர்வை பாதிக்கும் என்பது மேற்கத்திய நாடுகளில் 16ம் நூற்றாண்டு பிறகும், இரண்டாம் நிலை நாடுகளில் 19ம் நூற்றாண்டு பிறகும் மாறிக்கொண்டிருக்கின்றன.

உடை தேர்வை தற்பொழுது நுகர்வு கலாச்சாரம் தீர்மானிக்கிறது.

இங்கே உற்பத்தி - நுகர்வு பற்றிய ஒரு புதிய பார்வை தேவைப்படுகிறது (இதன் தொடர்பில் நண்பர் ஜமாலன் உடன் மேற்க்கொண்ட உரையாடலில்... ஒரு நீண்ட பட்டியல் நூற்களை கொடுத்து வாசிக்க சொல்லியிருக்கிறார்! அந்த கச்சேரியை இன்னொரு நாள் பார்க்கலாம்!)

விளைப்பொருட்கள் உற்பத்தியும், அதன் நுகர்வும் பண்டமாற்று முறையில் தொடங்கி வணிக முறையில் தொடர்கின்றன...
அதே மாதிரி பயன்பாட்டு பொருள் உற்பத்தியும், அதன் நுகர்வும் வணிக முறையில் தொடர்கின்றன...
ஆனால் பொழுதுபோக்கு (Entertainment) மற்றும் கலை (arts) என்பது வணிக முறையில் வருகின்ற போது... படைப்பாளி உற்பத்தியாளனாகவும், அதில் கிடைக்கும் பொருள் (money) உற்பத்தியாகவும் ஆகி... பார்வையாளனுக்கு (பயனாளி) அதில் கிடைக்கும் மகிழ்வு நுகர்வாகவும் மாறி நிற்கிறது...

16 ம் நூற்றாண்டு பிறகு மேற்கத்திய நாடுகளிலும் , 19 நூற்றாண்டுக்கு பிறகு இரண்டாம் நிலை நாடுகளிலும் கலை, விளையாட்டு, பொழுதுபோக்கு என்பது மூன்றாம்நிலை என்கிற நிலையிலிருந்து முதல்நிலை உற்பத்தி-நுகர்வுக்கு வந்திருக்கிறது.

இன்றைக்கு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அனைவரும் பொருளீட்டும் முதல்நிலை உற்பத்தியாளர்களாக மாறியிருக்கிறார்கள். அதன் நுகர்வாளர்கள் பொருள் செலவழித்து நுகர தொடங்கி விட்டார்கள்.

இதில் எங்கிருந்து உடை கலாச்சாரம் வந்தது என்கிறீர்களா? முதல் நிலை உணவுப்பொருட்கள் (விளைப்பொருட்கள்) உற்பத்தியும், நுகர்வும் பயனாளர்களுக்கு அடிப்படை தேவையாக இருக்கிறது. இரண்டாம் நிலை பயன்பாட்டுப்பொருட்களின் உற்பத்தியும், நுகர்வும் பயனாளர்களுக்கு தேவையினடிப்படையில் அமைகிறது. ஆனால் மூன்றாம் நிலையில் இருக்கிற கலை, விளையாட்டு, பொழுதுபோக்கு உற்பத்தி, நுகர்வு என்பது மிக குறைந்த அளவில் இருக்கிறது.

இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உற்பத்தி-நுகர்வு என்பதை முதல்நிலைக்கு நகர்த்த அல்லது அதிகப்படுத்த சந்தைபடுத்துதல் தேவைப்படுகிறது. இந்த புதிய நுகர்வு கலாச்சாரம் பாலுணர்வை தூண்டுவதன் மூலம் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கிறது.

ஒரு yamaha வண்டியோட்டுகிற ஆணுடன் பெண் வந்து ஒட்டிக்கொள்வது போல் விளம்பரங்கள் அமைக்கப்படுகிறது. பால்இனக்கவர்ச்சியை முக்கியப்படுத்தி சந்தைபடுத்துதல் என்பது தற்போதைய நிலை...

இப்படிப்பட்ட பால்இனக்கவர்ச்சியை தூண்டுகிற சந்தைப்படுத்துதல் இசைநிகழ்ச்சிகளில் அதிகளவு மேற்கத்திய நாடுகளில் கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளாக உண்டு.

விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்கிற நிலை மாறி உற்பத்தி-நுகர்வு என்கிற வணிக நிலைக்கு மாறியதால் பால்இனக்கவர்ச்சியை தூண்டுகிற சந்தைப்படுத்துதல் தேவைப்படுகிறது. அதனாலயே சியர்லீடர்ஸ் நடனக்குழுவின் இறக்குமதி!

இந்த விளம்பர சந்தைப்படுத்துதல் என்பது பருப்பு வகையறாக்களை கூட ராதிகா வந்து நடனமாடி விற்பனை செய்ய வேண்டிய சூழலுக்கு நகர்ந்திருக்கிறோம்.

இந்த புதிய நுகர்வு கலாச்சாரம் என்பது உடை தெரிவை தீர்மானிக்கும் காரணிகளாக மாறியிருக்கிறது. sexy dresses என்பது இன்றைக்கு சந்தையில் அதிகளவு விற்பனையாகும் உடைகள். பாலுணர்வை மறைக்க உடைகள் என்கிற நிலை மாறி... பாலுணர்வை வெளிப்படுத்த உடைகள் என்கிற புதிய நுகர்வுக்கலாச்சாரம் நம்மிடையே வந்திருக்கிறது.

இது நூற்றாண்டுகால மாற்றம்... இதை தீர்மானிக்கும் காரணிகளாக வணிக உலகமேயிருக்கிறது! உடையை தீர்மானிக்கும் சூழல், சமூக, அரசியல். மதக்காரணிகள் உடைப்பட்டு நிற்கின்றன!

பார்வை இரண்டு!
பெண்ணியத்தின் அடிப்படையில் இந்த பார்வை வைக்கப்பட வேண்டியதிருக்கிறது! தொடர்வேன் என்கிற நம்பிக்கையில்...

செவ்வாய், 15 ஏப்ரல், 2008

வாழ்க்கை துணைநலன் ஏற்பு விழா... (நண்பர் குசும்பன் இனிற இல்லறத்திற்க்கான வாழ்த்துக்கள்)


ஒவ்வொரு விடியலும்... "இவர் என்னை காதலிக்கிறார்! இவள் என்னை காதலிக்கிறாள்" - விழிமொழிகளாக இருக்கட்டும்.




குறிப்பு:
குசும்பரின் இல்லறத்தின் துணைவியாரே! அன்பு சகோதரி மஞ்சு அவர்களே! எங்கள் வலையுலக குசும்பை உங்களின் கரம் சேர்க்கிறோம். அவர் இன்று போல கண் கலங்காமல் என்றும் குசும்புடன் வாழ! உம்மின் அன்பெனும் குளத்தில் மூழ்கி முத்தெடுக்க வாழ்த்துக்கள்!.

குசும்பரின் சிற்சில பிழைகள் பொறுத்து, கத்தி, ஜல்லி கரண்டி, மேசை கரண்டி, தோசை கரண்டி போன்ற வன்மையான ஆயுதங்கள் தவிர்த்து... மத்து, பூரிகட்டை போன்ற மென்மையான ஆயுதங்கள் உபயோகித்து... வாழ வாழ்த்துகிறேன்!

வாழ்த்துக்களுடன்...
பாரி.அரசு

திங்கள், 14 ஏப்ரல், 2008

Incredible India வா! இளிச்சவாயன் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் இந்தியாவா!

கோவி யின்

Incredible India !

இடுகையை வாசித்தவுடன்... தன்னை சுற்றி நிகழும் நிகழ்வில் நாம் என்ன பாடம் படிக்கிறோம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது! ஆயிரகணக்கான ஆண்டுகளாக பரப்புரை செய்யப்பட்ட பார்ப்பானீய பிதற்றல்களால் நாலஞ்சாதியாய் நலிந்த மக்கள் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் தோட்ட தொழிலாளர்கள் தேவையென்று அழைத்தபோது... சொந்த மண்ணை, உறவுகளை விட்டு,விட்டு... சமூக, பொருளாதார இழிநிலைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள புறப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைய சிங்கப்பூர், மலேசிய தமிழ் மக்களின் ஆணிவேர்.

மூன்று தலைமுறைகளாக உழைத்து உருவாக்கிய சமுதாயம் தான் சிங்கப்பூர், மலேசியா தமிழ் மக்கள் சமூகம்.
இவர்களை சொந்த மண்ணிலே வாழவிடாமல் விரட்டிய இந்திய பார்ப்பானீய,பனியா அதிகார மையங்கள். தமிழர்கள் தங்கள் உழைப்பால் உருவாக்கிய சமூகத்தின் ஊடாக தனது அதிகார பரவலாக்கத்தை தொடங்கி இருக்கிறது.

மதம், கலை, கலாச்சாரம் (பண்பாடு) என்கிற போர்வையில் இவர்கள் தமிழர்களின் தோளில் ஏறி நடக்க தொடங்கியிருக்கிறார்கள்.

இந்திய தேசிய அடையாளத்துடன் இருக்கிற மக்களில் 95 சதவிகிதத்திற்க்கு மேலாக தமிழர்கள் வாழ்கிற நாட்டில் இந்திய அரசாங்கம் நடத்துகிற கலை, கலாச்சார விழாக்களில் எல்லா விளம்பரங்களும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வருகிறது. தமிழ் ஒரு அதிகாரபூர்வமான அரசாங்க மொழி இந்தியாவில்! சிங்கப்பூரில் தமிழ் அதிகாரபூர்வமான அரசாங்க மொழி! இங்கேயிருக்கிற மக்களுக்கு தமிழில் விளம்பரங்களும், நிகழ்வுகளும் நடத்துவதில் இந்திய கலை மற்றும் கலாச்சார துறைக்கு என்ன கேடு வந்தது. நடத்தமாட்டார்கள் தமிழன் இளிச்சவாயனாயிற்றே! தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்திய அரசாங்கம் தமிழில் தொடர்புக்கொள்ளாமல் மக்களுக்கு புரியாத இந்தியில் ஏன் தொடர்புக்கொள்கிறது?

இந்திய பார்ப்பானீய, பனியா அரசாங்கம் சிங்கப்பூர், மலேசியா அல்லது எங்காவது பிழைக்க ஓடிய தமிழனை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை... அவனிடமிருந்து ஏதாவது சுரண்ட முடியுமா என்று பார்ப்பதே இலக்காக கொண்டது.

இன்றைக்கு சிலோன் ரோட்டில் இருக்கிற தமிழ் இசைப்பள்ளிக்கு மரியாதை குறைந்து. கிட்டதட்ட 10க்கு மேற்ப்பட்ட கர்நாடக இசைப்பள்ளிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

காவேரியில் தண்ணீர் இல்லாமல் 2 லட்சம் பேர் விவசாய குடும்பங்களிலிருந்து சிங்கப்பூர், மலேசியா விற்கு கூலி தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முறையான விசா ஏதுவுமின்றி ஒளிந்து மறைந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆயிரகணக்கானோர் சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் வாடுகின்றனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 10,000 இளைஞர்கள் தங்களை இலங்கை அகதிகள் என்று அறிவித்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.

இவர்கள் செத்தால் பிணம் கூட அவர்கள் வீட்டுக்கு வராது. தன்னுடைய முகவரியை தொலைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் 3 தலைமுறைக்கு முன்னால் போன பூணூல் போட்டவனின் பேரப்புள்ளைக செய்கிற சாதனைக்கெல்லாம் விழா எடுக்கிற இந்திய பார்ப்பானீய, பனியா அரசாங்கங்கள். மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிற பார்ப்பானீய ஊடகங்கள். எத்தனை சிங்கப்பூர், மலேசிய, தென்னாப்பிரிக்க தமிழர்களின் சாதனைகளை கொண்டாடியது. ஏனென்றால் இவர்கள் குறுக்கே நூல் போடாதவர்கள். எத்தனை பேரை இந்திய அரசாங்கம் கெளரவித்திருக்கிறது.

அட! விமான சேவை என்று ஒன்று இருக்கிறது. மற்ற நாடுகளியெல்லாம் விமான சேவை என்பது சேவை துறை (service industry) அதனால் அதில் பயணம் செய்கிற மக்களின் நலனுக்கு உகந்ததை செய்வார்கள். இந்தியாவில் இரண்டு விமான சேவை நிறுவனங்கள் இருக்கிறது 'இந்தியன் ஏர்லைன்ஸ்', 'ஏர் இந்தியா' என்று சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கோ, திருச்சிக்கோ போகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்... அவர்களுக்கு புரியுதோ இல்லையோ ஆங்கிலத்திலும், இந்தியிலும் அறிவிப்புகள் செய்துக்கொண்டிருப்பார்கள். ஏண்டா வெண்ணைகளா! பயணம் செய்கிறவனுக்கு புரியாத மொழியில் எதற்க்கடா அறிவிப்பு? புரியுதோ இல்லையோ! அவ்வளவு கொழுப்பெடுத்த இந்தி திமிர்! மற்ற விமான சேவை நிறுவனங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ், மிகினி லங்கா எல்லோரும் தமிழில் அறிவிப்புகள் கொடுக்கும்போது, இவர்களுக்கு மட்டும் ஏன் வர மாட்டேங்கிறது. ஏனென்றால் தமிழன் இளிச்சவாயன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் :(

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

பார்ப்பானீய, பனியா தேசியமும், அல்லல்படும் மக்களும்...!

பஞ்சாப், காஷ்மீர், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா, கர்நாடகா தொடங்கி நாளை தமிழகத்தையும் ஆட்க்கொள்ள போகிற பிரச்சினை என்னவென்றால் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்வுரிமை என்பதாகும்...

சில நிகழ்வுகளை இங்கே பதிவுச்செய்துவிட்டு அதன் தொடர்ச்சியாக உரையாடுவோம்... 10 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது... பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்களில் தலித் தொழிலாளர்கள், பிற்ப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் என பிரிவு இருக்கும். தலித் தொழிலாளர்களுக்கு கஞ்சியும், தலித் அல்லாதவர்களுக்கு குழம்பு சோறும் வழங்கப்படும். அதே கூலியிலும் சிறிது வேறுபாடு இருக்கும். யாரோ ஒருவர் இதென்ன? தனி, தனியாக சமையல்... எல்லோருக்கும் குழம்பு சோறு என்று வழங்க... உடனே நாட்டு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதை கூட்டியவர் ஒரு அயோக்கிய மார்க்கிஸ்ட் என்பது தனிக்கதை... அதே நேரத்தில் சில கிராமத்தில் தலித், கள்ளர் பிரச்சினை தலைதூக்க, உடனே நாட்டு பஞ்சாயத்து கட்டுப்பாடு என்று தலித்களுக்கு வேலை மறுத்தல்! மாற்றாக பீகார், ஒரிசாவில் இருந்து லாரிகளில் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய வேலைகள் நடந்தன. தலித்கள் மீதான கட்டுப்பாடு நீக்கிய பிறகும், பிற மாநில தொழிலாளர்களை வரவழைத்தல் நிகழ்கிறது. ஏனென்றால் குறைந்த கூலி, ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்குவது. உள்ளூர் விவசாய தொழிலாளர்களை விட நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள் போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது தொடரும் போது உள்ளூர் தொழிலாளர்கள் நிச்சயமாக நாளை அவர்களை தாக்குவார்கள் என்பதே உண்மை!

இரண்டாவது இந்த ஒட்டர்கள் என்ப்படும் சாலை பராமரித்தல் மற்றும் தார்சாலை அமைத்தல் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் நிலைமையை பற்றியது... 800 மீட்டர் தார் சாலை 8 மணி நேரத்தில் அமைத்தால் மட்டுமே ஒப்பந்தகாரர்கள் சம்பாதிக்க முடியும். லாபத்தை கூட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிக தூரம் சாலை அமைக்க ஒப்பந்தகாரர்கள் முயற்சிப்பதற்க்கு தார்சாலை அமைக்கும் தொழிலாளர்கள் ஒத்துவராதால், வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் ஒப்பந்த கொத்தடிமைகளாக இறக்கப்படுகின்றனர். (இதில் கொதிக்கும் தாரில் வேலை பார்க்கும் முறையை மாற்ற வேண்டும், இயந்திரங்களின் உதவியுடனே சாலைகள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை அடுத்த நிலை...)

இதன் நீட்சியை கல்லுடைக்கும் தொழிலாளர்கள், சூளை தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் காணலாம்...

தொடரும்...
Related Posts with Thumbnails