செவ்வாய், 23 அக்டோபர், 2007

பெண்ணுரிமை எனும் புடலங்காய் கடைத்தெருவில் கிடைக்கவில்லை! வாங்கி வந்து கறிச்சமைக்க...

(இலக்கிய குட்டிச்சுவர்கள்)


பதிவுலகம் ஏகப்பட்ட அனுபவங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது, நாம் வாசிக்கிற பதிவுகள் நமக்குள் சில எண்ணவோட்டங்களை ஏற்படுத்தி விட்டு போயிருக்கும். அப்போதைக்கப்போது விவாதிப்பது என்பது ஓரு நிலை, அவற்றை தொகுத்து பார்க்கும் பொழுது நமக்கு எழுகிற நிலை வேறு... அப்படியான அதிர்வுகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.

அடிக்கடி இங்கே கடைத்தேறுவது பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், யாராவது இங்க வந்து "கற்பழிப்பு" என்ற சொல்லை பயன்படுத்தினால், உடனே பெண்ணுரிமை போராளிகள் வந்து உங்களை உண்டு,இல்லை என்று குதறியெடுக்கிறார்கள். "கற்பு" என்பது ஆணாதிக்க சிந்தனை என்று விளக்கம் கொடுப்பார்கள். நடைமுறையில் இந்தச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது அதனால் நான் அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன் என்றால், அடுத்தக்கட்ட தாக்குதல் ஆண்வர்க்க திமிர் (அ) ஆண்மய்ய சிந்தனை என்பார்கள்.

சிந்தனை என்பது செயல், செயல் என்பது இயக்கம், இயங்குகிற பொருள் மையத்தை விட்டுவிலகிச்செல்லும் என்பது இயக்கவியல். அப்புறம் சிந்தனை எப்படி ஆண் என்கிற மையத்தை நோக்கி நகருகிறது(இய்க்கவியல் முரண்) என்று குண்டக்கமண்டக்க நீங்கள் கேள்விக்கேட்டால் "ஆண்மய்ய சிந்தனை வெளியின்யூடாக எழுகிற பாஸிசிசத்தின் நீட்சி" (பெயரிலிடம் கடன் வாங்கியாவது) என்று உங்களுக்கு ஏதேனும் கும்மிகள் கிடைக்கலாம்.

எழுதுவதற்க்கு ஏகப்பட்ட விளக்கங்கள், அருஞ்சொற்பொருட்கள் கொடுக்கப்படும் குறிப்பாக பெண்ணுரிமை பற்றி எழுதும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், சிந்தனையூடாக கூட நினைத்திராத சில முட்டுச்சந்தில் கொண்டுச்சேர்ப்பார்கள் இந்த இலக்கிய வியபாரிகள்.

ஷ்ரேயா வை முட்டாள் பெண்ணாக திரையில் காண்பித்தற்க்கு பொங்கி எழுகிற பெண்ணுரிமை போராளிகள்..., பிரேமானந்தா மாதிரியான சாமியார்களிடம் அடைக்கலம் தேடுகிற முட்டாள்களை பற்றி பேசமாட்டார்கள். காஞ்சி கேடி "விதவை பெண்கள் களர் நிலம்" என்றால் வாய் மூடி கிடப்பார்கள். காஞ்சி கேடிகளின் கால்களை தாம்பூலத்தில் வைக்க சொல்லி பாலால் கழுவி அதை தீர்த்தம் என்று குடிக்கிற பெண்களை பற்றி எழுதமாட்டார்கள். பங்காரு - மாதிரியானவர்கள் பாதபூஜை என்று ஓவ்வொரு பெண்ணின் தலைமீதும் தன் காலை வைத்து ஆசிர்வாதம் வழுங்கும் போது தலையை காண்பிக்கிற பெண்களை கண்டுக்கொள்ளமாட்டார்கள்.

நான் எதை பேச வேண்டும் (அ) எழுத வேண்டும் என்று சொல்ல நீ யார்? என்று பொங்குவார்கள். ஏனென்றால் பெண்ணுரிமை என்கிற தளம் இவர்களுக்கு எழுத்து வியாபாரத்திற்க்கு வலுவான தளம்.

வேலைகாரிகளை கைநீட்டி அடிக்கும் முதலாளி பெண்களை பற்றி பேச மாட்டார்கள், முடிந்தால் தங்கள் வீட்டு வேலைகாரியையும் இரண்டு அடி அடிப்பார்கள். ஆனால் நடிகையை அடித்த கதையை நீட்டி முழக்குவார்கள்.

ஓரு சித்தாளோ அல்லது குடி பார்க்கும் சேரி பெண்ணோ எழுதுவதில்லை அதனால் தான் இங்கே பெண்ணுரிமை எழுத்துக்கள் எல்லாம் மேட்டுக்குடியின் மோனைகளை பிரதிபலிக்கும்.

இன்னும் சிலருக்கு பெண்ணுரிமை மாநாட்டு அரசியல் பிடித்திருக்கிறது, பெரியார் படம் போட்ட விஜயகாந்த கட்சிக்கு அழைப்பிதழ் கிடைத்தால் கூட பெரியாரிஸ்ட் என ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு அவர்களின் அரசியல் அறிவு பொங்கி வழிகிறதது.

பெண்ணுரிமையை ஓப்பீட்டு அளவில் பேசுவது மாதிரியான கேலிதனம் எங்காவது உண்டா?
ஆண் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொள்கிறான் அதனால் பெண்கள் பல ஆண்களுடன் உறவு கொள்ளலாம் எவ்வளவு முரணானது என்பது எழுத்துக்குள் அடங்க மறுக்கிறது.
தனிமனித ஓழுக்கம் ஆண்,பெண் இருவருக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டுமா? அல்லது ஓழுக்கமற்ற ஆண்களை ஓப்பிட்டு உரிமை பேசுவது வேண்டுமா? என்பதை வாசிப்பாளர்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்லலாம்.

பெண் சமைக்கிறாள், துணி துவைக்கிறாள். ஆண்கள் பேப்பர் படித்துக்கொண்டும், காப்பி குடித்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற ஓப்பீடு, உழைப்பு என்பது எல்லோருக்கும் பொது, ஆணின் உழைப்பு வடிவம் வேறாகவும், பெண்ணின் உழைப்பு வடிவம் வேறாகவும் இருப்பதால், பெண்கள் மட்டுமே உழைக்கிறார்கள் என்கிற மாதிரியான பிம்பம் முட்டாள்தனமானது. (இங்கே கேள்விக்கு உட்படுத்த வேண்டியது வடிவங்களையன்றி உழைப்பையல்ல! அதாவது இதுவெல்லாம் பெண்களுக்கான வேலை என்கிற கட்டமைப்பு).

(குறிப்பு : தொடாபற்ற இக்குறிப்புகள் - உங்களுக்குள் சிலவற்றுடன் தொடர்பு ஏற்படுத்தினால் நான் அதற்க்கு பொறுப்பல்ல)

28 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

ஏன் இந்த கொலை வெறி ?
:)

பிறகு மீண்டும் வருகிறேன். வீட்டுக்கார அம்மா லைனில் இருக்காங்க !
:))

ஜெகதீசன் சொன்னது…

//
ஏன் இந்த கொலை வெறி ?
:)
//
ரிப்பீட்டேய்ய்..

//
(குறிப்பு : தொடாபற்ற இக்குறிப்புகள் - உங்களுக்குள் சிலவற்றுடன் தொடர்பு ஏற்படுத்தினால் நான் அதற்க்கு பொறுப்பல்ல)
//
உங்களின் இந்தப் பாசிசப் போக்கைக் கண்டிக்கிறேன்.
:)

குசும்பன் சொன்னது…

ஆமா இங்க நான் கமெண் போட்டு சூப்பர் அலசல் என்று சொன்னால், நான் ஆனியவாதியா ஆகிவிடும் அபாயமும் இருப்பதால் மீ தீ எஸ்கேப்:)

பெயரில்லா சொன்னது…

பாரி. இது நல்ல ஒரு விவாதத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொன்றாக வரலாம்.

//"கற்பு" என்பது ஆணாதிக்க சிந்தனை என்று விளக்கம் கொடுப்பார்கள். //

கற்பு மட்டுமில்லைங்க இந்த மாதிரி பல வார்த்தைகள் இருக்கின்ற்ன. விதவை, அறுத்துக் கட்டினவ, விபச்சாரி, முதிர் கன்னி, இன்னும் இது போன்ற பல வார்த்தைகள் இருக்கின்றன. இதை ஏன் ஆணாதிக்க சிந்தனை என்று சொல்கிறார்கள் என்றால், இந்த வார்த்தைகள் பெண்ணுக்கென்று ஒழித்து விடப்பட்டவை. இதற்கான ஆண் பால் வார்த்தைகளை சொல்லுங்கள் பார்க்கலாம். மனைவியை இழந்தவர், திருமணமே செய்து கொள்ளாதவர், ஆண் விபச்சாரி. அதாவது பெண்பால் வார்த்தைகளோடு, ஆண் எனும் வார்த்தையைச் சேர்த்திக் கொள்வது.

என்னைப் பொறுத்தவரை விபச்சாரிகளிடம் செல்லும் ஒவ்வொரு ஆண்மகனுமே ஆண் விபச்சரிதான். (பாருங்கள் சுட்டிக் காட்டக் கூட எனக்கு வார்த்தை கிடைக்க வில்லை). தான் ஒரு சேஃபர் சைடில் இருந்து கொண்டு, எதிர்பாலினத்தவர் மீது மட்டும் கட்டவிழ்த்து விடும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை என்னவென்று சொல்வது???

//நடைமுறையில் இந்தச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது அதனால் நான் அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன் என்றால், அடுத்தக்கட்ட தாக்குதல் ஆண்வர்க்க திமிர் (அ) ஆண்மய்ய சிந்தனை என்பார்கள்.//

அவ்வளவு தீவிரமாக "நீ எப்படி அப்படி சொல்லலாம்? வெட்டறேன் பாரு உன்னை" என்று ஒரு வார்த்தைப் பிரயோகத்திற்காக சண்டைக்கு நிற்பவர்களை நான் பார்த்ததில்லை. பயன்பாட்டில் இருக்கிறது, அதனால் பயன்படுத்துகிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் பாரி. உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ, இந்த வார்த்தைகள் தவறான வார்த்தைகள் அல்ல என்ற நினைப்பை உங்களுக்குள் கடந்த காலத்தில் இந்த வார்த்தைகளை பயன் படுத்தியவர்கள் உரமேற்றிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த வார்த்தைப் பிரயோகம் தவறு என்ற சுட்டிக் காட்டல் எந்த நொடியிலும் இருக்கலாம். அந்த நொடி உங்களது வார்த்தைப் பிரயோகத்தைச் சுட்டிக் காட்டும் அந்த நொடியாக ஏன் இருக்கக் கூடாது? இதுக்கு உங்களது நியாயமான வாதம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அது எப்படி இந்த வார்த்தை தவறாகும்? என்று உங்களது கருத்தை சொல்வதாய் இருக்கலாமே தவிர, மத்தவங்க சொன்னாங்க அதனால நானும் சொல்வேன் என்பதாய் இருக்கக் கூடாது.

உதாரணத்திற்கு, நாதாறி, சனியனே, சண்டாளா போன்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தைகள் என்று கடந்த தலைமுறையினர் நமக்குள் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால் இவை கெட்ட வார்த்தைகளே அல்ல. ஒரு சில தாழ்த்தப் பட்ட வகுப்பினரை குறிக்கும் வார்த்தைகள் இவை. அந்த காலத்து ஜாதீய வெறி பிடித்தவர்கள் தனது வக்கிரத்தை இப்படிப்பட்ட வார்த்தைகளில் காட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர்.

பழக்கத்தில்தானே இருக்கின்றது என்று நாமும் நம்மையறியாமல் ஒரு சில வகுப்பினரை அவமதித்துதான் வருகின்றோம். இதைத் தடுத்து நாம் செய்வது தவறு எனும் சுட்டிக்காட்டல் நமக்கு எப்போதும் தேவைப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

//ஷ்ரேயா வை முட்டாள் பெண்ணாக திரையில் காண்பித்தற்க்கு பொங்கி எழுகிற பெண்ணுரிமை போராளிகள்..., பிரேமானந்தா மாதிரியான சாமியார்களிடம் அடைக்கலம் தேடுகிற முட்டாள்களை பற்றி பேசமாட்டார்கள். காஞ்சி கேடி "விதவை பெண்கள் களர் நிலம்" என்றால் வாய் மூடி கிடப்பார்கள். காஞ்சி கேடிகளின் கால்களை தாம்பூலத்தில் வைக்க சொல்லி பாலால் கழுவி அதை தீர்த்தம் என்று குடிக்கிற பெண்களை பற்றி எழுதமாட்டார்கள். பங்காரு - மாதிரியானவர்கள் பாதபூஜை என்று ஓவ்வொரு பெண்ணின் தலைமீதும் தன் காலை வைத்து ஆசிர்வாதம் வழுங்கும் போது தலையை காண்பிக்கிற பெண்களை கண்டுக்கொள்ளமாட்டார்கள்.//

யாருங்க சொன்னா? இதை யாரும் எதிர்க்கலை என்று. இது தவறான புரிதல். ஷ்ரேயாவை ஏன் இப்படி காட்னீங்க? என்று சண்டை போட்டதை ஏதோ ஷ்ரேயா ரசிகர் மன்றத்தினர், எங்கள் நடிகைக்கு இன்னும் ரெண்டு பாட்டு சேர்த்து கொடுத்திருக்கணும் என்ற ரேஞ்சில் சண்டை போட்டதாக நினைத்தீர்களோ? காலம் காலமாய் தமிழ் சினிமாவில் போகப் பொருளாய் மட்டுமே நடிகைகள் பயன் படுத்தப் பட்டு வருவதற்கான எதிர்ப்புதான் இது.

சரி இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் ஒரு நடிகையை கை நீட்டி அடிப்பது சரி என்கிறீர்களா? இதுக்கு என்ன சொல்லுவீங்க.இது தப்புதான்பா. ஒத்துக்கறேன். ஆனா அதைப் பத்தி பேசறதுக்குப் பதிலா இதைப் பத்தி பேசலாமே என்பீர்கள். என்ன சார் நியாயம் இது. தோ இப்பதான் ஒருத்தரு நடிகையை அடிச்சதைப் பத்தி எழுதி கிழி கிழின்னு கிழிச்சாச்சே. நீங்க வேலைக்காரியை அடிக்கும் முதலாளிகளை (பெண்கள் உட்பட) பத்தி எழுதி கிழிங்க.

அடுத்து நான் சித்தாள்கள் படும் கஷ்டத்தைப் பற்றி எழுதுகிறேன். அதை விட்டுட்டு, நடிகைகளைப் பற்றி பேசியதாலேயே ஒட்டு மொத்த பெண்ணுரிமையாளர்களை கேள்விக்குறியாக்குவதில் எனக்கு உடன் பாடில்லை.

//ஏனென்றால் பெண்ணுரிமை என்கிற தளம் இவர்களுக்கு எழுத்து வியாபாரத்திற்க்கு வலுவான தளம்.//

மிகத் தவறான வார்த்தைகள் பாரி.

//ஓரு சித்தாளோ அல்லது குடி பார்க்கும் சேரி பெண்ணோ எழுதுவதில்லை அதனால் தான் இங்கே பெண்ணுரிமை எழுத்துக்கள் எல்லாம் மேட்டுக்குடியின் மோனைகளை பிரதிபலிக்கும்.//

அப்போ சித்தாள் அல்லது சேரிப் பெண்கள் அல்லாதவர்கள் எல்லாம் மேட்டுக் குடியினர்தான். அவர்கள் லேடீஸ் க்ளப் போய்ட்டு வந்துக்கிட்டு, டைம் பாஸுக்காக மட்டும் எழுதுகிறாகள் என்று சொல்கிறீகளா? பாரி ஒருவருடன் வாதம் செய்யும் போது அவருடைய கருத்துக்களை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கிப் பேசுங்கள். ஆனால் அவருடைய நோக்க்கத்தை கேள்விக் குறியாக்கும் போது ஒரு தடவைக்கு மூன்று தடவை யோசியுங்கள்.

நீங்கள் கூடத்தான் மண்ணின் வளத்தைப் பற்றியும், தமிழ் பாடல்கள் ஏன் கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடுவதில்லை என்றும் ஆதங்கப் பட்டும் பதிவுகளைப் போட்டிருந்தீர்கள். அதை உயர்தர வர்க்கத்தின் கேளிக்கையை மையமாய் வைத்து பதிவு எழுதுகிறாரே? இவர் நிச்சயம் ஏகாதிபத்திய அடிவருடியாதான் என்று போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகலாமா?

//ஆண் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொள்கிறான் அதனால் பெண்கள் பல ஆண்களுடன் உறவு கொள்ளலாம் எவ்வளவு முரணானது என்பது எழுத்துக்குள் அடங்க மறுக்கிறது.தனிமனித ஓழுக்கம் ஆண்,பெண் இருவருக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டுமா? அல்லது ஓழுக்கமற்ற ஆண்களை ஓப்பிட்டு உரிமை பேசுவது வேண்டுமா? என்பதை வாசிப்பாளர்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்லலாம்.//

இப்படி எந்த பெண்ணிய வாதியேனும் கேட்கும் பட்சத்தில் அவர் மீது தாராளமாக சவுக்கைச் சுழட்டலாம். ஏறக்குறைய இது தொடர்பான ஒரு பதிவை நான் சமீபத்தில் போட்டிருக்கிறேன்.

http://blog.nandhaonline.com/?p=35

//(இங்கே கேள்விக்கு உட்படுத்த வேண்டியது வடிவங்களையன்றி உழைப்பையல்ல! அதாவது இதுவெல்லாம் பெண்களுக்கான வேலை என்கிற கட்டமைப்பு).//

இதைத்தாங்க பெண்ணியம் பேசுபவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் நீங்களும் அதே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள்.

இங்கே பொதுவான ஒரு கற்பிதம் இருக்கிறது. அதாவது பெண்ணியம் பேசுபவர்கள் எல்லாரும் சண்டைக்கென்றே திரிபவர்கள், அவர்கள் ஆம்பளை சிகரெட் பிடிச்சா, நானும் பிடிப்பேன், அவன் தண்ணி அடிச்சா, நானும் தண்ணி அடிப்பேன் என்று விதண்டாவாதம் பேசுபவர்கள், அவர்களுடைய முதல் எதிரி ஆண்கள்தான், இன்னிக்கு நான் சமைச்சுட்டேன், நாளைக்கு நீ சமைக்கணும், என்று புகுந்த வீட்டில் பிரச்சினை செய்பவர்கள், நைட் 12 மணிக்கு நான் வந்து இறங்கினாலும் ஏன் லேட்டுன்னு யாரும் கரிசனமாகக் கூட கேள்வி கேட்கக் கூடாது என்று திமிருக்கென்றே பேசுபவர்கள் என்ற ஒரு கற்பிதம் இருக்கிறது.

ஒரு வேளை உங்களது கேள்விகளும் கூட அந்த தவறான கற்பிதத்தை உண்மை என்று நம்பியதால் எழுப்பப் பட்டவையாகக் கூட இருக்கலாம். கூட்டமாக எவரேனும் கேள்வி எழுப்பும் போது அந்த கூட்டத்திலிருந்து எவரேனும் ஒரு சிலர் தவறான உதாரணங்களைக் காட்டலாம். அது எல்லா இடத்திலும் சாத்தியமே. அதற்காக ஒட்டு மொத்த கூட்டத்தையே தவறாகப் பேசக் கூடாது.

இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும் போது, ஒரு சில வார்த்தைகளைச் சொன்னார்கள். "காலம் காலமாய்,தலைமுறை தலைமுறையாய் இருட்டறையில் சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடந்தவனின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு, மற்றவர்களுடன் சமமாக ஓட்டப்பந்தயத்தில் கலந்த்கொள்ளச் செய்து, ஓடு, நீ முன் வந்தால் உனக்கு, அவன் முன் வந்தால் அவனுக்கு" என்று சொல்வது எப்படி தவறோ அது போலத்தான் இதுவும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இங்கே நாம் சிந்திக்க, அல்லது விவாதிக்க வேண்டியது இந்த வடிவங்களையும்,கட்டமைப்புகளைப் பற்றியும்தானே தவிர, ஆண் உயர்ந்தவனா?பெண் உயர்ந்தவளா என்பதல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

பெண்கள் அடிமைத்தனம் என்று எதை நினைக்கிறார்கள் ? ஆண்களைப் போல கட்டுப்பாடு இன்றி அல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பதையா ? அல்லது கட்டுப்பாட்டை மீறியதை சமூகம் ஏற்காத போதா ? இந்த கட்டுப்பாடுகள் பெண்களுக்கு தேவையா ? தேவை இல்லையா ? இன்றைய சூழலில் இதை ஆண்கள் நிர்ணயம் செய்வதில்லை, பெற்றோர் தவிர வேறு எவரும் கட்டுப்படுத்துவதும் இல்லை.

லக்ஷ்மி சொன்னது…

பாரி.அரசு, அநேகமா நந்தாவே உங்களோட பெரும்பான்மையான கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லிட்டார். நானும் சில விஷயங்களைச் சொல்றதோட சில உதாரணங்களையும் காட்டலாம்னு நினைக்கறேன்.

//ஷ்ரேயாவை முட்டாள் பெண்ணாக திரையில் காண்பித்தற்க்கு பொங்கி எழுகிற பெண்ணுரிமை போராளிகள்..., பிரேமானந்தா மாதிரியான சாமியார்களிடம் அடைக்கலம் தேடுகிற முட்டாள்களை பற்றி பேசமாட்டார்கள். //

ஷ்ரேயாவின் பாத்திரப் படைப்பைப் பற்றிக் கவலைப்பட்ட அதே பதிவர் இதோ நீங்க சொன்ன அதே பிரேமானந்தாவிடம் போய் தன் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டுச் சரண் புகுந்த முட்டாள்களையும் பற்றி பேசியிருக்கிறார்.

//வேலைகாரிகளை கைநீட்டி அடிக்கும் முதலாளி பெண்களை பற்றி பேச மாட்டார்கள், முடிந்தால் தங்கள் வீட்டு வேலைகாரியையும் இரண்டு அடி அடிப்பார்கள். ஆனால் நடிகையை அடித்த கதையை நீட்டி முழக்குவார்கள்// இதோ வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் நிலை குறித்த ஒரு பதிவு - இந்தப் பதிவரும் இப்போது மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்தான் என்.ஆர்.ஐ தான். தனிப்பட்ட முறையில் என் வீட்டில் வேலைக்கு உதவிக்கு வரும் பெண்மணியை வேலைக்காரி என்ற பதத்தில் கூட யாரும் சுட்டுவதில்லை. "அன்பு அம்மா இன்னிக்கு சாயந்தரம்தான் வருவாங்களாம். அதனால கொஞ்சம் காலைல சமையலுக்கு மட்டும் பாத்திரம் தேய்ச்சு கொடுத்துடும்மா " என்றுதான் என் அம்மாவும் சொல்லுவார் - அன்பரசி என்பது அந்தப் பெண்மணியின் மகளின் பெயர், எனவே அவர் அன்பு அம்மா.

//இங்கே கேள்விக்கு உட்படுத்த வேண்டியது வடிவங்களையன்றி உழைப்பையல்ல! அதாவது இதுவெல்லாம் பெண்களுக்கான வேலை என்கிற கட்டமைப்பு// நந்தா சொன்னது போல இதையேதான் பெண்ணுரிமை பேசும் பதிவர்கள் பலரும் சொல்லி வருகிறோம் - வார்த்தைகள் வேறாயிருக்கலாம்.
//ஆணின் உழைப்பு வடிவம் வேறாகவும், பெண்ணின் உழைப்பு வடிவம் வேறாகவும் இருப்பதால், பெண்கள் மட்டுமே உழைக்கிறார்கள் என்கிற மாதிரியான பிம்பம் முட்டாள்தனமானது// நிச்சயம் அப்படி ஒரு வாதம் வைக்கப் படுமேயானால் அது முட்டாள்தனமானதுதான். ஆனால் ஒரே வேலையைச் செய்வதற்கு ஆண்களுக்கு ஒரு கூலியும் பெண்களுக்கு ஒரு கூலியும் நிர்ணயிக்கப் படுவது எவ்வகையில் நியாயம்? அதே போல் வெளியில் சென்று பொருளீட்டுவதை ஆண்கள் மட்டுமே செய்து வந்த காலத்தில் வீட்டு வேலைகள் முழுமையும் பெண்களின் தலையில் இருந்ததை தவறென்று யாரும் இங்கே சொல்லவில்லை. ஆனால் இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் கூட வீட்டுக்குள் வந்ததும் ஆண் தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்துவிடுவதும் பெண் இரவுச் சமையலை செய்வதுமாக அமையும் போதுதான் கேள்வி எழுகிறது. இல்லறமென்பது இருவரும் பொறுப்புகளையும் அதே நேரம் மகிழ்வையும் பங்கிட்டுக் கொள்வதாய் இருக்க வேண்டும். பொறுப்புகளை ஒருவருக்கும் மகிழ்ச்சியை ஒருவருக்குமாய் பங்கிடுதல் தவறென்றுதான் எழுதுகிறோம் இங்கே.

//இங்க வந்து "கற்பழிப்பு" என்ற சொல்லை பயன்படுத்தினால், உடனே பெண்ணுரிமை போராளிகள் வந்து உங்களை உண்டு,இல்லை என்று குதறியெடுக்கிறார்கள்// பாரி.அரசு, நமது மொழி அறிவை நாள்தோறும் நிமிடந்தோறும் நம்மையறியாமலே நாம் புதுப்பித்துக் கொண்டுதானிருக்கிறோம். தாழ்ந்த ஜாதியினர் என்று ஒரு வார்த்தை முன்பு உபயோகிக்கப் பட்டு வந்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் ஒரு சிலரால் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த வார்த்தை இன்னமும் அழகாக அவர்களது நிலையைக் காட்டுகிறது என்பதால் புரிந்துணர்வுடையோர் அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றே அவர்களை குறிப்பிடத் தொடங்கினர். அது போலவே ஒரு தவறான பொருள் தரும் வார்த்தை பொது புத்தியில் புரையோடிப் போயிருந்தாலும் கூட சமூக உணர்வுடையோர் அதை அகற்றிவிட்டு சரியான ஒரு சொல்லையே அங்கே பதிக்க வேண்டும் - அதற்கு முதல் படியாக நாமேனும் அந்த வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் அத்தகைய வார்த்தைகள் சுட்டிக் காட்டப் படுகின்றன. யாரையும் குற்றம் சொல்வதற்காய் இல்லை.

//பதிவுலகம் ஏகப்பட்ட அனுபவங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது// நிச்சயமாய். ஒவ்வொரு விவாதமும் எங்கே தொடங்கினாலும் அது முடிவடையும் புள்ளி அதில் பங்குபெறும் அனைவருக்கும் புரிதலை ஏற்படுத்துமிடமாய் இருக்க வேண்டுமென்பதே என் ஆவல் - பெரும்பாலான இடங்களில் அது நடந்துமிருக்கிறது. இந்த விவாதமும் அப்படி ஒரு புள்ளியைச் சந்திக்கும் என்றே நம்புகிறேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கோவி!
ஃஃ
பிறகு மீண்டும் வருகிறேன்.
ஃஃ
சரி மீண்டு(ம்) வாருங்கள்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம ஜெகதீசன்!
:((

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாங்க குசும்பன்!

தாராளமா சொல்லுங்க! எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்:(
எல்லாம் நம்ம மக்கள் தான்:(( என்ன அப்ப அப்ப இப்படி உணர்ச்சி வசப்படுவார்கள் கொஞ்சம் லூஸ்ல விட்டுங்கங்க :((

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம் நந்தா!
உங்களுக்காவும், நட்பின் ஊடாக இந்த எழுத்துகளை சேர்ப்பித்த நட்புக்கும் சேர்த்து!

விவாதத்திற்க்கான பொருளடக்கமோ அல்லது அதற்க்கான தளமோ இந்த இடுகையில் இப்போதில்லை! ஓரு சிறு விளக்கம் மட்டும் தந்துவிட்டு நகர்ந்துக்கொள்கிறேன்.

இது முழுக்க, முழுக்க வாசிப்பனுபவத்தின் குறிப்புகள்.

ஓவ்வொரு குறிப்பும் தனித்தவை. அதிலிருந்து இந்த ஓன்றை மட்டும் விளக்கினால் மற்றவற்றை நீங்கள் தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையில்...

ஃஃ
வேலைகாரிகளை கைநீட்டி அடிக்கும் முதலாளி பெண்களை பற்றி பேச மாட்டார்கள், முடிந்தால் தங்கள் வீட்டு வேலைகாரியையும் இரண்டு அடி அடிப்பார்கள். ஆனால் நடிகையை அடித்த கதையை நீட்டி முழக்குவார்கள்.
ஃஃ

நான் எழுதியது சரியான கோணத்தில் உங்களை பார்க்க வைக்கவில்லை என்றால், அது என்னுடைய தவறு மன்னிக்கவும்.

பத்மப்ரியா மற்றும் சாமி இடையிலான பிரச்சினையை மையமாக வைத்துப்பார்த்தால் பத்மப்ரியா சுயமரியாதை உள்ள பெண்ணாக இல்லை(நன்றி லஷ்மி) ஏனென்றால், நடிகையை அடிப்பது தவறென்றால் , அதை சேரன் படப்பிடிப்பில் அடித்தார என்ற கேள்வி கேட்டபோது சிரித்துக்கொண்டு மழுப்புகிற பத்மப்ரியா, அதே சேரன் ஓர் நேர்காணலில் "ஏய்" என்று கைநீட்டி மிரட்டியபோதே எதிர்ப்புகாட்டியிருப்பார். ஆகையால் அவரையோ அல்லது சாமியையோ தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு இந்த கருத்தை பேச முடியுமா?

கருத்தியலாக "நடிகையை அடிப்பது தவறு" என்று பேசியிருந்தால், நடிகை என்பது நடிப்பை தொழிலாக கொண்ட பெண், ஆகையால் ஓரு தொழிலாளியை அடிப்பது தவறு என்கிற புள்ளியை நோக்கி நகர்ந்தால் மட்டுமே சிந்தனை ஓட்டம் சரியானதாக இருக்கும். அப்படியிருந்திருந்தால் மட்டுமே தொழிலாளிகளை அடிக்கிற முதலாளிகளை பற்றி பேசியிருப்பார்கள். ஆனால் வகையாய் தங்களுக்கு ஏற்ற மாதிரி பெண்ணை அடித்த ஆண் என்கிற விளம்பர, வியாபார எழுத்தாக மாற்றப்பட்டது.

அதைச்சுட்டவே முதலாளிகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தொழிலாளிகளை அடிக்கிறார்கள் என்பதை குறிப்பிடவே வேலைகாரி, முதலாளி பெண் என்கிற நிலையை சுட்டினேன்.


ஃஃ

இங்கே பொதுவான ஒரு கற்பிதம் இருக்கிறது. அதாவது பெண்ணியம் பேசுபவர்கள் எல்லாரும் சண்டைக்கென்றே திரிபவர்கள், அவர்கள் ஆம்பளை சிகரெட் பிடிச்சா, நானும் பிடிப்பேன், அவன் தண்ணி அடிச்சா, நானும் தண்ணி அடிப்பேன் என்று விதண்டாவாதம் பேசுபவர்கள், அவர்களுடைய முதல் எதிரி ஆண்கள்தான், இன்னிக்கு நான் சமைச்சுட்டேன், நாளைக்கு நீ சமைக்கணும், என்று புகுந்த வீட்டில் பிரச்சினை செய்பவர்கள், நைட் 12 மணிக்கு நான் வந்து இறங்கினாலும் ஏன் லேட்டுன்னு யாரும் கரிசனமாகக் கூட கேள்வி கேட்கக் கூடாது என்று திமிருக்கென்றே பேசுபவர்கள் என்ற ஒரு கற்பிதம் இருக்கிறது.
ஃஃ

இதை தான் நான் சொன்னேன் சிந்தனையினூடாக கூட நமக்கு தோன்றாத முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்துவீர்கள் என்று.:))

நான் ஏற்கனவே இணைய உரையாடலில் உங்களிடம் சொல்லியிருக்கிறேன் நந்தா, இந்திய சூழலில் பெண்அடிமையை பற்றிய பெரியாரின் பார்வை மிகச்சிறப்பானது.

சமூக விடுதலையையும், வர்க்க விடுதலையையும் பேசாத எழுத்துக்கள் பெண்ணுரிமை என்ற ஓன்றை எடுத்தாளுமானால், அது நிச்சயம் விளம்பர, வியாபார எழுத்தாக மட்டுமே இருக்கும். அதற்க்கு ஓரு சிறிய உதாரணம் ராஜீவ்காந்தி மிக நெருங்கிய பெண் தோழி தமிழகத்தின் முன்னாள் எம்.பி, தன் பேச்சில் எப்பொழுதும் பெண்ணுரிமை என்று பொங்குகிறவர், ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை பற்றிய கேள்வி வரும்போதெல்லாம், மெளனமாக நகர்வார்.
இரண்டாவது இதுவரை தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய பெண்களுக்கெதிரான கொடுமைகளையெல்லாம் எதிர்த்து போராடியது வர்க்க போராளிகளும், சமூக நீதி போராளிகளும் மட்டுமே. ஏனென்றால் அவர்களால் மட்டுமே உரிமை என்பது என்ன? விடுதலை என்பது என்ன? என்பதை உணர முடியும்.

நான் தனி, தனியாக இவர்கள் என்று குறிப்பிடவில்லை, ஏனென்றால் இது உணரப்பட வேண்டும். இது விளம்பர எழுத்து என்பதை ஓவ்வொருவரும் தாங்களாகவே உணர்வார்கள். அதனால் ஓட்டுமொத்தமாக நான் வியாபாரம் என்று சொன்னேன் என்று சொல்லி நீங்கள் குற்றஞ்சாட்டினால் நான் கடந்து போய்க்கொண்டேயிருக்கிறேன். நீங்கள் உணரும் வரை நான் காத்திருப்பதில் எனக்கு விருப்பமில்லை.

தொடர்ந்து லஷ்மிக்கு தருகிற பதிலிலும் கொஞ்சம் விளக்கம் தந்துவிட்டு போயிடுறேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் லஷ்மி!

நல்ல வளமான எழுத்துக்கு சொந்தகாரர், முதன்முதலாக என் பதிவின் பக்கம் எட்டிப்பார்த்திருக்கிறீர்கள். நன்றி!
நந்தா விற்க்கான பதிலில் உங்களுக்கான சிலக்குறிப்புகளும் உள்ளடக்கம். அதனால் அதைத்தாண்டி

ஃஃ
ஓரு சித்தாளோ அல்லது குடி பார்க்கும் சேரி பெண்ணோ எழுதுவதில்லை அதனால் தான் இங்கே பெண்ணுரிமை எழுத்துக்கள் எல்லாம் மேட்டுக்குடியின் மோனைகளை பிரதிபலிக்கும்.
ஃஃ

நீங்கள் குறிப்பிட்ட என்ஆர்ஐ யோ அல்லது யார் எழுதினாலும் அவர்களின் வலியை பிரதிபலிக்காது, வேண்டுமானால் அது வெறும் பச்சாதாபத்தின் வெளிப்பாடாகவேயிருக்கும்.

கவிஞர் தாமரை ஓரு முறை குறிப்பிட்டதை இங்கே சொல்ல வேண்டும். "ஆண் கவிஞர்கள் எல்லாம் பெண்கள் இப்படிதான் நினைத்திருப்பார்கள், உணர்ந்திருப்பார்கள் என்று பெண்ணைப்பற்றிய கற்பனையை மட்டுமே எழுத முடியும், ஓரு பெண் எழுதும்போது தான் அது பெண்ணின் உண்மையான உணர்வாகயிருக்கும்".

நான் எழுதியக்குறிப்புகள் ஏதோ உங்களுக்கானதோ அல்லது தனிமனிதர்களுக்கானதோ அல்ல!

கொஞ்சம் பொதுவாக பேசினால், இங்கே எது சமூக விடுதலைக்கு தடையாக இருக்கிறது? எது உரிமைகளை தடை செய்கிறது? என்பதை கேள்விக்கேட்க வேண்டும்.
இந்திய அளவில் பார்ப்பானீய, வர்க்க கட்டமைப்பு எல்லாவற்றுக்கான அடிப்படை தளம். அதில் ஆண், பெண் என மனிதர்கள் அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள். அதில் பெண்களுக்கான பாதிப்பு அதிகம்.

அப்ப கேள்விகளும், எதிர்ப்புகளும் அந்த கட்டமைப்பை நோக்கி நீள வேண்டாமா? அதை விடுத்து தனியாக பெண்ணுரிமை என்று ஓன்று தனியாக இருக்கிறதா?

மனிதனின் விடுதலை உணர்வின் ஊடாக வர்க்க முரணற்ற சமூகத்தின் வெளியில் தான் உரிமையின் எல்லைகள் இருக்க வேண்டாமா?

இல்லை இதையெல்லாம் விடுத்து தனியாக பெண்ணுரிமை என்று ஓன்று தனியாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால். அந்த புடலங்காயை வாங்கி வந்து நன்றாக கடலைப்பருப்பு சேர்த்து வேகவைத்து, தோங்காய் துருவலும் சேர்த்தால் சுவையாகயிருக்கும் (அதை சமைப்பதற்க்கு நந்தாவிடம் சொல்லுங்கள் ஏனென்றால் நீங்கள் பெண் அதனால் நான் எள்ளி நகையாடியதாக நினைக்கலாம்).

நன்றி

பெயரில்லா சொன்னது…

//பத்மப்ரியா மற்றும் சாமி இடையிலான பிரச்சினையை மையமாக வைத்துப்பார்த்தால் பத்மப்ரியா சுயமரியாதை உள்ள பெண்ணாக இல்லை(நன்றி லஷ்மி) ஏனென்றால், நடிகையை அடிப்பது தவறென்றால் , அதை சேரன் படப்பிடிப்பில் அடித்தார என்ற கேள்வி கேட்டபோது சிரித்துக்கொண்டு மழுப்புகிற பத்மப்ரியா, அதே சேரன் ஓர் நேர்காணலில் "ஏய்" என்று கைநீட்டி மிரட்டியபோதே எதிர்ப்புகாட்டியிருப்பார். ஆகையால் அவரையோ அல்லது சாமியையோ தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு இந்த கருத்தை பேச முடியுமா?//

தாராளமாக பேசலாம். முதலில் தொழில் முறை ரீதியாக வலியோன் எளியோனை அடிப்பதில் எனக்கு வெகு நிச்சயம் உடன்பாடில்லை. அது ஆண்- ஆண், ஆண்-பெண், பெண்-ஆண், பெண்-பெண் எந்த காம்பினேஷனாக இருந்தாலும் சரி.

ஒருவர் இன்னொருவருடன் எந்தளவு அட்டாச்மெண்ட் உணர்வுடன் இருக்கிறாரோ, அதைப் பொறுத்துதான் எவரும் உரிமையை எடுத்துக் கொள்ள முடியும். சேரன் கையை நீட்டி மிரட்டுவதோ, அடித்திருப்பதோ, அவர்களின் அட்டாச்மெண்ட்டை, பொறுத்த தனிப்பட்ட விஷயம். சேரன்கிட்ட திட்டோ, அறையோ வாங்கியிருந்தா, அவங்க அப்போ பொது சொத்து. வர்றவன் போறவன் எல்லாம் ரெண்டு அறை கொடுத்துட்டு போகலாம் அப்படித்தானே?

ஏண்டா அடிச்சேன்னு திருப்பிக் கேட்கக் கூடாது? ஏன்னா, டைரக்டச் சாமியை பத்தி நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்க. ஆனா, இவங்களை மட்டும் அன்னிக்கு மட்டும் அமைதியா இருந்தே. இன்னிக்கு என்னமோ ரொம்ப ஆடற?ன்னு நீங்க கேள்வி கேட்பீங்க.

என்னை என் நண்பனோ, இல்லை எனக்கு பிடிச்சவங்களோ, இல்லை நான் மரியாதை வெச்சிருக்கிறவங்களோ, திட்டினாலோ, இல்லை அடிச்சாலோ, போனா போகுதுன்னு, பொறுத்துப் போய்க்குவேன். அதே தெருவுல போறவனோ, இல்லை பஸ்ல கண்டக்டரோ, "டா" போட்டு பேசுனாக்கூட, மரியாதையா பேசுன்னு சுர்ர்ருன்னு திருப்பி எகிறுவேன்.

(இங்கே அட்டாச்மெண்ட் என்கின்ற வார்த்தைக்கு நன்றியுணர்வு, பாசம், நட்பு, மரியாதை என்று எது வேண்டுமானாலும் அர்த்தமாய் இருக்கலாம்)

//சமூக விடுதலையையும், வர்க்க விடுதலையையும் பேசாத எழுத்துக்கள் பெண்ணுரிமை என்ற ஓன்றை எடுத்தாளுமானால், அது நிச்சயம் விளம்பர, வியாபார எழுத்தாக மட்டுமே இருக்கும். //

வெல். ஒரு பிரச்சினையை நீங்க எந்த பார்வையை அணுகுகிறீர்களோ, அதே முறையில்தான் மற்ற எல்லாரும் அணுக வேண்டும். அப்ப்டி இல்லைன்னா, அவங்க விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார எழுத்தாளர்கள். ப்ளா, ப்ளா, ப்ளா......

பெண்ணியம், சாதியம், வர்க்கப் பிரச்சினை உள்ளிட்ட எவற்றுக்கும் பன்முகத்தன்மை இருக்கிறது. இப்படி தான் போகணும். இப்படி போனா மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று எவருமே அறுதியிட்டுக் கூறிட முடியாது. அப்படியே எவரேனும் சொன்னாலும், "யப்பா, இவரே சொல்லிட்டாருப்பா, அப்போ கண்டிப்பா இப்படியேதான் நாமும் நடக்கணும் என்று கண்ணை மூடிக் கொண்டு நடப்பவர்கள் வெகு நிச்சயம் சுய சிந்தனையுடையவர்களாக இருக்க முடியாது. அவர்களுக்கும், இந்தியாவைக் காப்பாற்ற நேரு குடும்பத்தை விட்டால் ஆளில்லை என்று கட்டமைக்கப் பட்ட புனித பிம்பத்தை பற்றிக் கொண்டு தொங்குகிறவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை."

//இதுவரை தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய பெண்களுக்கெதிரான கொடுமைகளையெல்லாம் எதிர்த்து போராடியது வர்க்க போராளிகளும், சமூக நீதி போராளிகளும் மட்டுமே. ஏனென்றால் அவர்களால் மட்டுமே உரிமை என்பது என்ன? விடுதலை என்பது என்ன? என்பதை உணர முடியும். //

அப்போ என்ன சொல்ல வர்றீங்க. "தா பொண்ணு போராட்டம் பெண்ணியம் பத்தியெல்லாம் உனக்கு என்ன தெரியும்? எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். அதெல்லாம் பெரிய மேட்டரு. அதெல்லாம் உனக்கு வேண்டாம். நீ ஒரு ஓரமா உக்காந்து கோலம், சமையல் குறிப்புகள்னு எழுதிக்கிட்டிரு. நாங்க போராடி உனக்கு எது தேவையோ வாங்கித் தருவோம். நீ பாட்டுக்கு சும்மா கூவிக்கிட்டிருக்காத" என்று சொல்ல வருகிறீர்களா?

அய்யா, வர்க்க மற்றும் சமூகப் போராளிகள் போராடியிருக்கிறார்கள் தான் ஒத்துக் கொள்கிறேன். சத்தியமா அது ரொம்ப பெரிய செயல்தான். அதுக்காக இந்த போராட்டத்தில் வேற எவருமே பங்கெடுத்துக்கொள்ளவோ, ஏன் பேசவோ கூடாது என்கிறீர்களா? அப்படியே பங்கெடுத்துக்கிட்டாலும், அவர்கள் சொல்வது போலவே செய்து கொண்டு போக வேண்டும். என்கிறீர்களோ?

//அதனால் ஓட்டுமொத்தமாக நான் வியாபாரம் என்று சொன்னேன் என்று சொல்லி நீங்கள் குற்றஞ்சாட்டினால் நான் கடந்து போய்க்கொண்டேயிருக்கிறேன். நீங்கள் உணரும் வரை நான் காத்திருப்பதில் எனக்கு விருப்பமில்லை.//

அது சரி சொல்றதுக்கென்னங்க. வாயா வலிக்குது. இல்லை காசா பணமா? தா இது சரியில்லை. தா அது சரியில்லை. இப்படித்தான் பண்ணனும் இப்படி பண்ணலைன்னா, நீ வியாபாரம்தான் பண்ற. நீ எழுதுறதெல்லாம் சும்மா நடிப்புக்குன்னு போற போக்குல சொல்லிக்கிட்டு போய்க்கிட்டிருக்கலாம்.

ஏன்னா நீங்க சொல்லியிருத்தலின் அடைப்படையும், விதமும் உணர்த்தலின் பொருட்டாய் எனக்குத் தோன்ற வில்லை. வெறுமனே குற்றம் சாட்டுவதன் பொருட்டாகவே எனக்குத் தோன்றுகிறது.

தனது சகோதரியோ, தனது அம்மாவோ, இல்லை பக்கத்து வீட்டிலோ எங்கேயோ ஒரு வழியிடத்தில் நாம் பார்க்கும் பெண்கள் இன்னும் கஷ்டப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் "ஏம்பா இப்படி இருக்காங்க?" என்று சிலர் குமுறினால், நீ ஏன் வர்க்கப் புரட்சியைப் பற்றிப் பேச வில்லை? நீ ஏன் சமூகப் பிரச்சினையைப் பற்றிப் பேச வில்லை? என்று சொல்லி அது உங்களுக்கு வியாபார எழுத்தாகவோ, சீப் பப்ளிசிட்டிக்காக செய்யும் ஸ்டண்டாகவோ தோன்றினால், Well பாரி, நாங்கள் மாறப் போவதுமில்லை. நீங்கள் காத்திருக்க வேண்டிய தேவையுமில்லை.

பெயரில்லா சொன்னது…

//இந்திய அளவில் பார்ப்பானீய, வர்க்க கட்டமைப்பு எல்லாவற்றுக்கான அடிப்படை தளம். அதில் ஆண், பெண் என மனிதர்கள் அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள். அதில் பெண்களுக்கான பாதிப்பு அதிகம்.
அப்ப கேள்விகளும், எதிர்ப்புகளும் அந்த கட்டமைப்பை நோக்கி நீள வேண்டாமா? அதை விடுத்து தனியாக பெண்ணுரிமை என்று ஓன்று தனியாக இருக்கிறதா?//

தலித் இலக்கியம், தலித் பெண்ணியம் என்ற வார்த்தைகளை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா பாரி?

அது என்ன தலித் பெண்ணியம்? பெண்ணியம், பெண் விடுதலை என்பது எல்லா சமூகத்தினருக்கும் ஒன்றுதானே. இதில் என்ன வேறுபாடு என்று கேள்விக் கேட்கப் பட்டதற்கு ஒரு பதில் சொல்லப் பட்டது.

தலித் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்ற பெண்கள் தனது சமூக ஆண்கள் மற்றும் தனது சமூக பெண்கள் என்ற இருவரிடமிருந்து விடுதலை அடைந்தால் போதும் என்ற நிலை.

அதுவே தலித் பெண்களுக்கு, தனது சமூகத்தைச் சேர்ந்த ஆண்களிடமிருந்து விடுதலை, தனது சமூகத்தை அல்லது குடும்பத்தைச் சேர்ந்த அதே தலித் பெண்களிடமிருந்து விடுதலை, தங்களை விட உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த ஆண் முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து விடுதலை, கடைசியாக தங்களை விட உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த பெண் முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து விடுதலை என்ற பல கூறுகளைக் கடக்க வேண்டியதாய் இருக்கிறது.

அதுதான் தலித் பெண்ணியம். பெண்ணியத்தின் ஒரு உட்கூறுதான் இதுவும்.அதைப் பற்றியும் பேசுவதுதான் தலித் இலக்கியம்.என்று சொல்லப் பட்டது

ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு வீட்டிற்கு கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருக்கும், ஒரு தலித் பெண்ணிற்கு, தனது வீட்டில் தன்னை அடிமைப் படுத்த முயலும் தந்தை, கணவன் உள்ளிட்ட ஆண்களிடமிருந்து விடுதலை, தன்னை அடிமைப் படுத்தி வேலை வாங்க முயலும், தன் மாமியார் போன்றவர்களிடமிருந்து விடுதலை, தன்னை அடிமைப் போல நடத்தும் தனது முதலாளி ஆண்களிடமிருந்து விடுதலை, தன்னை வசவு வார்த்தைகளால் வசை பாடத் தயங்காத, பிழிந்து வேலை வாங்க முயற்சிக்கும், அவரது கணவனிடம் அடிமைப் பட்டுக்கிடக்கும் முதலாளித்துவ பெண்களிடமிருந்து விடுதலை என்று பல்வேறு வகையான பரிமாணங்கள் இருக்கின்றன.

இவற்றில் நீங்கள் சொல்லி இருக்கும் வர்க்கப் புரட்சியோ, சமூகப் புரட்சியோ வர வில்லை என்று நீங்கள் நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

பெரியாரின் உட்கூறுகளைத் தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் சாட்டையை சுழற்றும் முன்பு பெண்ணியத்தின் உட்கூறுகளையும் தெரிந்துக் கொண்டுப் பேசுங்கள்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

ஃஃ
பெண்கள் அடிமைத்தனம் என்று எதை நினைக்கிறார்கள் ? ஆண்களைப் போல கட்டுப்பாடு இன்றி அல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பதையா ? அல்லது கட்டுப்பாட்டை மீறியதை சமூகம் ஏற்காத போதா ? இந்த கட்டுப்பாடுகள் பெண்களுக்கு தேவையா ? தேவை இல்லையா ? இன்றைய சூழலில் இதை ஆண்கள் நிர்ணயம் செய்வதில்லை, பெற்றோர் தவிர வேறு எவரும் கட்டுப்படுத்துவதும் இல்லை.
ஃஃ
வணக்கம் கோவி!

ஏகப்பட்ட கேள்விய கேட்டு வைத்திருக்கிறீர்கள். யாராவது வந்து பதில் சொல்லுறாங்களா என்று பார்ப்போம் :))

மங்கை சொன்னது…

பெண்ணுரிமை பத்தி நமக்கு பேச தெரியாதுங்கோவ்..அதுனால நான் ஜூட்

ஒரே ஒரு சந்தேகம்...புடலங்காய்க்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தம்

Ayyanar Viswanath சொன்னது…

மக்கள்ஸ்

எனக்கு இந்த பெண்ணுரிமை பத்தி பேசினா,எழுதினா விவாதம் பண்ணா டயர்ட் ஆகுதுப்பா..அட! எத்தன காலத்துக்குய்யா இதையே பேசிட்டிருப்பிங்கன்னு சலிப்பா வேற இருக்கு....ஆண்,பெண் அப்படின்னெல்லாம் பிரிச்சு பார்க்காம மனிதர்கள்னு பார்க்க எப்ப கத்துக்க போறோம்? பெண் என்பதற்காக கரிசனமோ,தூற்றவோலாம் வேண்டாம்யா..குறைந்த பட்சம் உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாம இருங்கய்யா ன்னுதான் கேட்க தோணுது
.............
உண்மையான பெண்விடுதலை அப்படின்னா என்ன?ஆண் அவனோட ஆதிக்கத்தை அதிகமா எங்க பிரயோகிக்கிறான்? அப்படின்னெல்லாம் யோசிச்சி பார்த்தா உடலில்தான் முடியுது..உடல் மட்டும்தான் பெண்ணோட பலவீனமா இருக்கு உடலின் அரசியலை/தடைகளை பெண் உடைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கு..அந்த தடத்த சரியா பிடிச்சி பெண் தனக்கான நகர்வுகளை கொண்டு செல்ல முயன்றால் இந்த பெண்ணியம் அப்படிங்கிற வார்த்தைகளை அகராதியிலிருந்து தூக்கிடலாம்...

முரண்வெளில ஒரு கட்டுரை வந்திருக்கு இத படிங்க கொஞ்சம் தெளிங்க :)
http://muranveli.net/2007/10/22/99/
.....
நான் இங்கே சொல்ல விழைந்தது நாம் பேசப்பட வேண்டிய விதயங்களுக்கான எல்லைகள் வெகு தொலைவிலிருக்கிறது என்பதுதானே தவிர பேசவே கூடாது என்பதில்லை..

ஆரோக்கியமான விவாததிற்கு நன்றி

பி.கு.பெண்ணியம் அப்படிங்கிற வார்த்தைய பார்த்தாவே லக்ஷ்மியும் நந்தாவும் ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுர்ராங்களே..:)..

இன்னும் மெய்ன் பார்டிய காணோம் :))

பெயரில்லா சொன்னது…

//பெண்கள் அடிமைத்தனம் என்று எதை நினைக்கிறார்கள் ? //

கேள்விக்குட்படுத்தப்படவேண்டிய பெண்ணிற்கான எல்லைகள்.. உதாரணமாக.. 1. பொம்பளை பிள்ளைய ஏன் நிறைய படிக்க வைக்க வேண்டும்... 2. பொம்பளை பிள்ளைய அவ்வளவு தூரம் அனுப்பக்கூடாது... 3. பொம்பளை பிள்ளைய கல்யாணம் கட்டிக்கொடுக்காம இருக்க கூடாது...
4. பொம்பளை பிள்ளைக்கு இத்தனை தைரியம் கூடாது. (இந்த காலத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று கேட்காதீர்கள் நான் கூறுவது என்னைப்போல் பெண்களை வைத்து அல்ல, அடித்தட்டு மற்றும் எளிய பெண்களை மையப்படுத்தி)


//ஆண்களைப் போல கட்டுப்பாடு இன்றி அல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பதையா? //

ஆண்கள் பெற்றிருக்கின்ற சட்டபூர்வமான;
உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு இருப்பது பெண்ணியத்தின் ஒரு வகை அதன் பெயர் முதலாளியப் பெண்ணியம்(மார்க்கசிய பெண்ணியம்)

//கட்டுப்பாட்டை மீறியதை சமூகம் ஏற்காத போதா? //

சமூகம் மட்டுமல்ல
பெண்களை தாழ்வுபடுத்தும் அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் எதிர்ப்பு தான் இந்த பெண்ணியம்

//இந்த கட்டுப்பாடுகள் பெண்களுக்கு தேவையா ? தேவை இல்லையா?//

பெண்ணியம் என்பது ஒரு "அப்ஸ்ராக்ட்.." அதிலிருந்து பலவகையில் இயக்கங்களை (Functions)நிருவலாம்.. அது அவரவருடைய தேவைகளையும்,வழிகளையும் பொருத்தது. தவறான, தேவையற்ற மற்றும் ஈர்ப்பாக(அட்ராக்டிவாக) நாம் பெண்ணியத்தை நிருவலாம். அது சரியான பாதையில் போகாது..!

//இன்றைய சூழலில் இதை ஆண்கள் நிர்ணயம் செய்வதில்லை, பெற்றோர் தவிர வேறு எவரும் கட்டுப்படுத்துவதும் இல்லை.
//

ஆம், இன, சமூக, கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை தான் பெண்ணியமே தவிர இது ஆண்கள் என்ற ஒரு தனிப்பட்ட சமூகம் மட்டும் சார்ந்ததல்ல, ஆனால் இது மேம்போக்கானது, வினைத்திறன்மிக்க வகையில் கூறவேண்டுமானால் வன்புணர்ச்சி, தகாப்புணர்ச்சி, பாலியற் தொழில் போன்ற பொதுப்பிரச்சினைகளையும் சார்ந்தது தான் பெண்ணியம் இவற்றை செய்வது (பெண்ணின் விருப்பமின்றி (அ) பலவந்தப்படுத்தி) ஆண்கள் தான் என்ற வகையில் ஆணை சார்ந்தது...

கெள்விகளுக்கு விடை சொல்ல வேண்டுமென்று தான் சொன்னேன், கட்டமைப்பை சரி செய்வதற்கு பெண்களின் சுதந்திரம் மிகவும் தேவையான ஒன்று ஆதலால், இது இரண்டுமே ஒரே சமத்தில்(parallel) கொண்டு செல்ல வேண்டிய ஒன்று. ஒன்றை முடித்து இன்னொன்று என்றால் அதில் எத்தனை தூரம் புரொடொக்டிவ்வாக இருக்கும் தெரியாது...

Unknown சொன்னது…

நீங்கள் சிரேவை பற்றி எல்லாம் பேசுகிறீர்கள் சினிமா அனைவரும் ஒரு படத்தை ஒரு முறை அல்லது இரண்டு முறை பார்ப்பார்கள். ஆனால் பெண்விடுதலை என்று சொல்லும் பெண்களே அதிகம் ஆதரவு தரும் டி.வி சீரியல்கள் அனைத்தும் பெண்களை மட்டமான புத்தி உடையவர்களாகவே சித்தரிக்கின்றன மருமகளை கொடுமை படுத்தும் மாமியார் மற்றும் வில்லத்தனம் பேராசை வெறி ஆகிய அமைதிக்கும் யாரும் விரும்ம்பாத செயல்களை செய்யக்கூடியவர்களாகவே இருக்கிறதே அதுமட்டுமா இதை நடிப்பவரும் ஒரு பெண்தானே அதை ஏன் சிந்திக்காமல் நடிக்கிறார்கள் எப்படியோ எது எப்படி போனால் நமக்கென்ன நமக்கு பணம் கிடைத்தால் சரி என்று தானே.
நான் அதிகம் கூறவேண்டும் என்று நினைக்கிறேன் அதனான் இந்த சுட்டியை பாருங்கள்
http://sinthikkatherinthamanithan.blogspot.com

ஜமாலன் சொன்னது…

தாமதமான பின்னோட்டம் என்றாலும் தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சு மதிப்பு சார்ந்த தலைப்பு என்று விட்டுட்டேன். நிற்க..

//இங்கே எது சமூக விடுதலைக்கு தடையாக இருக்கிறது? எது உரிமைகளை தடை செய்கிறது? என்பதை கேள்விக்கேட்க வேண்டும்.
இந்திய அளவில் பார்ப்பானீய, வர்க்க கட்டமைப்பு எல்லாவற்றுக்கான அடிப்படை தளம். அதில் ஆண், பெண் என மனிதர்கள் அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள். அதில் பெண்களுக்கான பாதிப்பு அதிகம்.

அப்ப கேள்விகளும், எதிர்ப்புகளும் அந்த கட்டமைப்பை நோக்கி நீள வேண்டாமா? அதை விடுத்து தனியாக பெண்ணுரிமை என்று ஓன்று தனியாக இருக்கிறதா?//

இவ்வளவு தெளிவாக சிந்திக்கிற நீங்க புடலங்காய் கடலை பருப்பு போன்றவற்றை தவிர்க்கலாம். எழுத்து வியபாரிகள் என்பது பதிவுலகிற்கு பொருந்தாது. இங்கு யாரும் வியாபார பொருளாக எதையும் கடைவிரிப்பதில்லை. பதிவு என்பது ஒரு பகிர்தல்.. ஒரு பெரிய நட்பு வட்டம். அதுபோன்ற வார்த்தைகளை வியபார பத்திரிக்கைளில் எழுதுபவர்களுக்கு பயன்படுத்தலாம். அங்க நீங்கள் இதையெல்லாம் பேசமுடியாது.

எனத நிலை ஏற்கனவே லஷ்மி அவர்கள் பதிவின் பின்னோட்டத்தில் சொன்னதுதான். தவிரவும் இந்த விவாதம் ஆழமாக பலவற்றை நோக்கிச் சென்றிருப்பது ஆரோக்கியயமானது.

சமூக மாற்றம் அல்லது புரட்சிக்கான முன்நிபந்தனையாக பெண்ணியத்தை வைக்க வேண்டாம் என்பதுவும், பெண்ணியம் உண்மையான பிரச்சனைகளை மூடி மறைக்கிறது என்பதுமே உங்கள் வாதம். எனது புரிதல் சரி என்று நினைக்கிறேன். பெண்ணின் பிரச்சனைகளைப் பேசாமல் பெண்ணோடு எப்படி உரையாடப் போவீர்கள். அல்லது பெண்ணை எப்படித்தான் சமூக மாற்றத்திற்கான சக்தியாக ஆக்குவீர்கள்? இப்பிரச்சனைகள் பேசப்பட்டால்தான் ஒரு உரையாடல் சாத்தியம். புரிதலும் தெளிவும் சாத்தியம். உங்கள் எழுத்து ஒட்டுமொத்தமாக அதைப்பற்றி பேசுவதே தவறு என்கிற கண்ணோட்டத்தில் இருக்கிறது.

இப்பிரச்சனைகள் பற்றி பேசுவதா? யார் யாரை ஒடுக்கவது என்பதெல்லாம் ஆதிக்கம் சார்ந்த பிரச்சனை. அதற்காக இதைப்பேசுவதே கூடாது என்பது உரிமைகளை மறுப்பதாகிவிடும்.

//இதையெல்லாம் விடுத்து தனியாக பெண்ணுரிமை என்று ஓன்று தனியாக இருக்கிறது //

நிச்சயமாக இருக்கிறது. ஆண்/பெண் முரண் என்பது வர்க்கமற்ற சமூகத்திலும் சாத்தியம் என்பதே மார்க்சியம். கம்யூணிஸ சமூகத்தின் முக்கிய முரண்பாடுகளில் ஒன்று இது. இதை தீர்த்து விட்டாலும் இயற்கைக்கும் / மனிதனுக்கும் உள்ள முரண்பாடு என்பது ஒரு தீர்க்கவியலா முரண்பாடு இதனைதான் சூழலியம் பேசுகிறது. இவ்விரு முரண்பாடுகளையும் இன்று முன்வைப்பது புரட்சியை பலவீனப்படுத்தும் என்பதால் இதனை நாம் பின்னுக்குத் தள்ளலாமே தவிர.. இல்லை என்று மறுத்துவிட முடியாது. பேசியதையே பேசவேண்டாம் என்பதற்காகாத்தான் கோட்பாட்டு ரீதியாக பேசுகிறேன். ஆக, பெண்ணியம், சூழலியம் எல்லாமே இன்றைய பிரதான வர்க்க-பார்ப்னீய முரண்பாட்டின் கண்ணோட்டத்திலிருந்து பெசப்படவேண்டும் என்பது நியாயமான நிலைபாடாக இருக்கலாம். பேசுவதே வியாபார உத்தி என்பது கதவடைப்பு வாதம் ஆகிவிடும்.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

ஜமாலன் கோட்பாடு மற்றும் சித்தாந்த ரீதியாக பேசி நான் சொன்ன சில விஷயங்களை இன்னும் அழகாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள். நன்றி.

//பேசுவதே வியாபார உத்தி என்பது கதவடைப்பு வாதம் ஆகிவிடும்.//

//உங்கள் எழுத்து ஒட்டுமொத்தமாக அதைப்பற்றி பேசுவதே தவறு என்கிற கண்ணோட்டத்தில் இருக்கிறது.//

இதுக்கு ஒரு பெரிய்ய ரிப்பீட்டேய்.

லக்ஷ்மி சொன்னது…

பாரி.அரசு,

முதலில் சில விஷயங்களைப் பட்டியலிட்டு இவற்றைப் பற்றியெல்லாம் பெண்ணுரிமை பேசும் மேட்டுக்குடி பெண் பதிவர்கள் தொடவே மாட்டார்கள் என்றீர்கள். அப்படியில்லை, அதையும் பற்றி இங்கே பலர் எழுதியிருக்கிறார்கள் என்று நான் சில எடுத்துக்காட்டுகளைச் சொன்னதும் அதெல்லாம் நீங்கள் உணர்ந்து எழுதியதில்லை - பச்சாதாபம் மட்டுமே தொனிக்கும் அவ்வெழுத்துக்களில் என்று அவற்றை ஒரேடியாக புறங்கையால் தள்ளி விட்டீர்கள். சரி, உங்களின் வாதப்படியே பார்த்தாலும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி எழுதும் நீங்கள் ஒரு நிச்சயமாகப் பாட்டாளி வர்க்கத்தைச் சார்ந்தவர் அல்ல. எனவே உங்களின் எழுத்தும் வெறும் பச்சாதாபம் மட்டும்தானா? அதிலுள்ள அக்கறையும் மனிதாபிமானமும் அடிமனதிலிருந்து வந்தவை இல்லை என்றாகிவிடுமா?

இன்றைய சூழலில் மனித வர்க்கத்தின் சமத்துவத்திற்கு உள்ள தடைகள் மூன்று.
1. ஏழை X பணக்காரன் வேறுபாடு.
2. பிறப்பிலடிப்படையிலான பாகுபாடுகள்(நமக்கு ஜாதி,சில இடங்களில் நிறம், வேறு சில இடங்களில் மதம்)
3. ஆண் X பெண்

இதில் முதலிரு வகைப்படுத்தல்களில் நான் பாதிக்கப்படும் பக்கத்திலில்லை என்பதாலேயே அவை இரண்டையும் பற்றி பேசும் தகுதியை இழந்துவிட்டதாக அறிவித்து விட்டீர்கள். மூன்றாவதில் நான் பாதிக்கப் படும் பக்கத்திலிருந்தாலும் முதலிரு விஷயங்களைப் பற்றி பேசாததால் இதைப் பற்றி மட்டும் பேசுவது வெறும் வியாபார உத்தி என்று முத்திரை குத்தியாயிற்று. அதாவது மறைமுகமாக வெற்று கும்மிகளை எழுத மட்டுமே லாயக்கானவர்கள் என்று ஒரு சாராரை ஒதுக்குகிறீர்கள். நான் என்ன எழுத வேண்டுமென்று நீங்கள் ஏன் முடிவு செய்கிறீர்கள் என்றும் அவர்கள் கேட்டுவிடக்கூடாது வேறு.... நல்ல லாஜிக்...

//கருத்தியலாக "நடிகையை அடிப்பது தவறு" என்று பேசியிருந்தால், நடிகை என்பது நடிப்பை தொழிலாக கொண்ட பெண், ஆகையால் ஓரு தொழிலாளியை அடிப்பது தவறு என்கிற புள்ளியை நோக்கி நகர்ந்தால் மட்டுமே சிந்தனை ஓட்டம் சரியானதாக இருக்கும். அப்படியிருந்திருந்தால் மட்டுமே தொழிலாளிகளை அடிக்கிற முதலாளிகளை பற்றி பேசியிருப்பார்கள். ஆனால் வகையாய் தங்களுக்கு ஏற்ற மாதிரி பெண்ணை அடித்த ஆண் என்கிற விளம்பர,
வியாபார எழுத்தாக மாற்றப்பட்டது.//

ஒரு நடிகையை ஒரு இயக்குனர் அடிப்பது என்பது ஒரு முதலாளி தொழிலாளியை அடிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது உங்கள் பார்வை. ஒரு சிலருக்கு அது ஒரு பெண்ணை ஆண் தன் ஆதிக்கத் திமிரினால் மட்டும் அடிப்பதாகத் தெரிவது அவர்களின் பார்வை. இதில் உங்கள் பார்வை கொண்டுதான் மற்றவர்களும் பார்க்கவேண்டும் என்பது வாதமாக அல்ல பிடிவாதமாகத்தான் தெரிகிறது. அப்படியில்லாதவர்கள் மீது நீங்கள் சுமத்தும் அபாண்டம்
//வேலைகாரிகளை கைநீட்டி அடிக்கும் முதலாளி பெண்களை பற்றி பேச மாட்டார்கள், முடிந்தால் தங்கள் வீட்டு வேலைகாரியையும் இரண்டு அடி அடிப்பார்கள். // தாங்கவொண்ணாததாக இருக்கிறது. எப்படி பாரி, அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நீங்கள் ஞானக்கண் கொண்டு பார்த்தது போல் சொல்கிறீர்கள்? ஆனால் உங்கள் வாதங்களை யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டால் உடனே அவர்கள் உங்களை முட்டுச் சந்தில் கொண்டு நிறுத்துவதாக வேறு குற்றம் சாட்டுகிறீர்கள்.

//இந்திய சூழலில் பெண்அடிமையை பற்றிய பெரியாரின் பார்வை மிகச்சிறப்பானது// ஆனால் இங்கே பெரியாரிஸ்ட்டுகளே கூட அவரின் பெண்ணுரிமைப் பார்வையை மட்டும் ஒப்புக் கொள்வதில்லை தெரியுமா? அதைப் பற்றி ஏன் நீங்கள் எழுதுவதேயில்லை, இதனால் உங்களுக்குப் பெண்களின் மீதே அக்கறை இல்லை. பெண் என்கிற ஒரு அடக்குமுறைக்காளான வர்க்கத்தின் மீது அக்கறையற்ற உங்களால் வர்க்கப் புரட்சி பற்றியும் ஜாதீய ஒழிப்பு பற்றியும் மட்டும் என்ன பேசிவிட முடியும் என்று நான் கேட்டால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்?

இங்கே இந்த விவாதத்துக்குச் நேரடியாகத் தொடர்பற்றதாயிருந்தாலும் ஒரு சிறு விளக்கம் - பத்மப்ரியா X சாமி விவகாரத்தில் அவர் அடித்ததைக் கூட நான் அதிகம் பொருட்படுத்தவில்லை. ஆனால் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கையில் இயக்குனர் சாமி சொன்ன இரு கூற்றுகள்தான் என்னை அதிர வைத்தன -
1. அவ ஒரு பொண்ணு மாதிரியே தெரியல, அவளைப் பாத்தா எனக்கு செக்ஸுவல் ஃபீலிங் வரவேயில்லை. அவகிட்டப் போய் நான் எப்படி தப்பா நடந்துக்குவேன்?
2. ஒரு நல்ல நடத்தையுள்ள பொண்ணு இப்படியெல்லாம் பேசவே மாட்டா. அந்தப் பொண்ணுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். இதுலேர்ந்தே அவ எப்படிப்பட்டவன்னு தெரியலையா?

இந்த விஷயம் சம்பந்தப்பட்ட என்னுடைய பதிவு மேற்சொன்ன நச்சுக் கருத்துக்களை மையப்படுத்தியே இருந்தது. எதற்கு இதை இங்கே சொல்கிறேன் என்றால் - ஒரு விஷயத்தை நீங்கள் பார்ப்பதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு கோணத்திலிருந்தும் வேறொருவர் பார்க்க முடியும். அதனாலேயே நான் சொல்வது மட்டுமே சரி. என்னைப் போல சிந்திப்பது மட்டுமே சரி. மாற்றுக் கருத்துக்களை கேட்டால் நான் காதைப் பொத்திக் கொள்வேன் - இல்லை அதை இகழ்வேன் என்பது ஆரோக்கியமான மனப்போக்கல்ல.

இதற்கு மேலும் நீங்கள் உங்கள் கருத்தியலை விட்டு வெளிவரத்தயாரில்லையெனில் - நாங்களும் காத்திருக்கத் தயாராயில்லை. உலகில் யாரும் யாரையும் நம்பியில்லை. உங்கள் கருத்து உங்களுக்கு, எங்களுடையது எங்களுக்கு என்று விலகிப் போக வேண்டியதுதான்.

துரை சொன்னது…

அவன்/அவள் இருக்க வேண்டிய இடத்தில் இரூந்நா, யாரூக்கும் தொந்திரவு இல்ல, ஆதி காலத்தில் ஆண்மகன் காட்டூக்கும்,பெண் விட்டையும் பார்தார்கள்,அப்போழுது அந்த சமயத்தில் காட்டூக்குள் சென்று வேலை பார்பது என்பது சாதாரணம்
அல்ல, இன்று வேலை எளிது என்பதால் ஆணுக்கும் பென்னுக்கும்
பிரச்சனை முளைக்கின்றன

லக்ஷ்மி சொன்னது…

may i know what happened to my previous comment?

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

லஷ்மி!

ஃஃ
may i know what happened to my previous comment?

ஃஃ
நீங்கள் எழுதிய ஓரு பின்னூட்டம், நேற்றிரவு 11 மணிக்கு வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்து வாசித்தபோது விடுபட்டுவிட்டது (இரவு தூங்க கெடவில்லை :-)))
காலையில் வெளியிட்டு விட்டேன், வேறெந்த பின்னுட்டமும் உங்களிடமிருந்து எனக்கு வரவில்லை :((

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் மங்கை!
ஃஃ
பெண்ணுரிமை பத்தி நமக்கு பேச தெரியாதுங்கோவ்..அதுனால நான் ஜூட்

ஒரே ஒரு சந்தேகம்...புடலங்காய்க்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தம்

ஃஃ
இப்படி சந்தேமெல்லாம் பெண்களுக்கு வரவே கூடாதுங்க :((

அரசியல்ல இதெல்லாம் சகஜம் கண்டுக்காதீங்க :))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் அய்யனார்!

ஃஃஃ
ஆண்,பெண் அப்படின்னெல்லாம் பிரிச்சு பார்க்காம மனிதர்கள்னு பார்க்க எப்ப கத்துக்க போறோம்?
ஃஃஃ

அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
ஈயம் இல்லையின்னா எப்படி :((

சுட்டிக்கு நன்றி! வாசிக்கணும்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் வள்ளி!
வருகைக்கு நன்றி!
ஃஃஃ
கெள்விகளுக்கு விடை சொல்ல வேண்டுமென்று தான் சொன்னேன், கட்டமைப்பை சரி செய்வதற்கு பெண்களின் சுதந்திரம் மிகவும் தேவையான ஒன்று ஆதலால், இது இரண்டுமே ஒரே சமத்தில்(parallel) கொண்டு செல்ல வேண்டிய ஒன்று. ஒன்றை முடித்து இன்னொன்று என்றால் அதில் எத்தனை தூரம் புரொடொக்டிவ்வாக இருக்கும் தெரியாது...
ஃஃஃ

பெண்களுக்கான விடுதலையை மறுப்பது இந்த கட்டமைப்பு தானே! அதை கேள்வி கேட்க்கும் போது மட்டும் தானே விடுதலையை பற்றியே பேச முடியும் :((

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம் நந்தா!
//
ஒருவர் இன்னொருவருடன் எந்தளவு அட்டாச்மெண்ட் உணர்வுடன் இருக்கிறாரோ, அதைப் பொறுத்துதான் எவரும் உரிமையை எடுத்துக் கொள்ள முடியும். சேரன் கையை நீட்டி மிரட்டுவதோ, அடித்திருப்பதோ, அவர்களின் அட்டாச்மெண்ட்டை, பொறுத்த தனிப்பட்ட விஷயம். சேரன்கிட்ட திட்டோ, அறையோ வாங்கியிருந்தா, அவங்க அப்போ பொது சொத்து. வர்றவன் போறவன் எல்லாம் ரெண்டு அறை கொடுத்துட்டு போகலாம் அப்படித்தானே?
//

என்ன குழப்புகிறீர்கள்? உரிமை என்று பேசுங்கள், அல்லது உணர்வு என்று பேசுங்கள். ஓரிடத்தில் உரிமையும் இன்னொரு இடத்தில் அது உணர்வாகவும் பேசுகிறீர்கள். அப்ப இந்த பட்டியலை சரிபாருங்கள்...

1. அட்டாச்மெண்ட் உணர்வுடன் இருக்கிற மனைவியை கணவர்கள் அடிக்கலாம்.
2. அட்டாச்மெண்ட் உணர்வுடன் இருக்கிற சகோதரியை சகோதரர்கள் அடிக்கலாம்.
...

இப்படியே போயி...
அக்கறையுள்ள முதலாளி தொழிலாளியை அடிக்கலாம், சரியா வருமா என்று யோசித்து சொல்லுங்கள் :)))

//
ஏண்டா அடிச்சேன்னு திருப்பிக் கேட்கக் கூடாது? ஏன்னா, டைரக்டச் சாமியை பத்தி நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்க. ஆனா, இவங்களை மட்டும் அன்னிக்கு மட்டும் அமைதியா இருந்தே. இன்னிக்கு என்னமோ ரொம்ப ஆடற?ன்னு நீங்க கேள்வி கேட்பீங்க.
//
உங்களுக்கு சாமி - ஐ திட்டினால் போதுமா!

அடிப்பதற்க்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது, ஆண் என்கிற திமிரா? இயக்குநர் என்கிற முதலாளித்துவமா? என்கிற கேள்விக்கு விடை தேடுங்கள் எல்லாம் விளங்கும்.

வேறொரு நிகழ்வில் ஆண் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி ஓரு பெண் தாக்கப்பட்டால் அங்கே நானும் எனது கண்டனத்தை பதிவு செய்ய தயங்கமாட்டேன். இங்கே பிரச்சினை திசைமாற்றப்பட்டது, எழுதுபவர்களின் சொந்த நலனுக்காக என்பதே எனது குறிப்பு.

Related Posts with Thumbnails