திங்கள், 12 நவம்பர், 2007

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)

விடுமுறை...1

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

நான் சிங்கைக்கு வருவதற்க்கு முன்பு வேளச்சேரியில் நண்பர்களுடன் ஓர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் வாடகை 2500 எல்லாம் சேர்த்து மாதம் 3000 வரும். அங்கே இருந்த நண்பர்கள் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள், சிலர் வேலை தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் மாத வருவாயின் சராசரி 3000 தாண்டாது. ஐந்தாறு போராக இருந்தார்கள். இது 2005 மார்ச் வரையிலான காலக்கட்டம். நான் சிங்கைக்கு வந்து சில மாதங்கள் கழித்து நான் தொலை பேசிய போது அருகாமையில் இருக்கிற வீடு விலைக்கு வருகிறது நீ வாங்கு வசதியாகயிருக்கும் என்றார்கள். எவ்வளவு விலை? என்றேன் 27 லட்சம் சொல்கிறார்கள் என்றார்கள். வேண்டாம்ப்பா இப்போ முடியாது. பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டுவிட்டேன். ஓர் ஆண்டு கழித்து சென்னைக்கு செல்வதற்க்கு ஆயத்தமான போது, நண்பர்களை தொடர்புக்கொண்ட போது அவர்கள் அங்கேயில்லை என்றார்கள் ஏன்? என்னவாயிற்று? என்றேன். அந்த வீட்டிற்க்கு அடுத்த வீட்டை 10,000 ரூபாய் வாடகைக்கு யாரோ ஐடி பசங்களுக்கு விட்டிருக்கிறார்கள். உடனே இந்த வீட்டு ஓனரும் 10,000 கொடுங்க இல்லையின்னா காலி செய்யுங்க என்று சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாமல் காலிச்செய்து விட்டு கிளம்பிருக்கிறார்கள். சரி முன்னாடி விற்பனைக்கு வந்த வீடு என்னவாயிற்று என்று விசாரித்தால் அதை ஓன்னேகால் கோடி என்று விலை சொன்னார்கள்!

இந்த அதிர்ச்சி ஓர் ஆண்டுக்குள் சமூகத்தில் ஏற்ப்பட்ட பொருளியல் வேறுபாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப துறைதான் காரணம் என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டு, மிகப்பெரிய சிந்தனை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

துறையின் உள்ளேயிருப்பவர்களும், வெளியே சமூகமும் மிக மேசமான சிந்தனைப்போக்கில் இருக்கிறார்கள். இவன்களால் தான் விலையேற்றம் என்கிற குற்றச்சாட்டும். என்னய்யா மிஞ்சுது உங்களை விட சில ஆயிரம் மட்டுமே அதிகம் என்கிற பதில் ஆதாங்கமும் மேலும், மேலும் வலுக்கிறதே தவிர... பிரச்சினை என்ன என்பதை பற்றி ஆய்வுச்செய்ய யாருக்கும் மனம் இல்லை.

முதலில் தகவல் தொழில்நுட்பத்தின் வேலைவாய்ப்பு பற்றிய சரியான அறிவின்மையை ஓத்துக்கொள்ள வேண்டும். பலருக்கு இதில் வேலைப்பார்ப்பவர்களின் உண்மையான நிலை தெரியாது. நான் என்னையும், என்னை சுற்றியுள்ள அமைப்பையும் உங்களுக்கு சரியான அறிவை ஏற்படுத்துவதன் மூலமே உங்களுக்கு என்னுடைய பிரச்சினையை பற்றிய உண்மை நிலை தெரியும். இங்கே தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என் நோக்கம்.
பிரச்சினைகளை புரியவைப்பதற்க்கான முயற்சி அவ்வளவே!

இங்கே நேரிடையாக ஓரு நிறுவனத்தில், அதனுடைய தகவல் தொழில்நுட்ப துறைக்கு வேலைக்குச்செல்பவர்கள் (உதாரணத்திற்க்கு BSNL - அதனுடைய ஐடி துறைக்கு வேலைக்கு ஆள் எடுப்பது போல்..) வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் நிலை. (அப்ப நீங்களெல்லாம் எப்படிய்யா வேலை பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களே!)

கீழே உள்ள பட்டியல் சில விளக்கங்கள் தரும்.
IT Professional = தகவல் தொழில்நுட்ப வல்லுநர் = ஓப்பந்த கூலி தொழிலாளி
Consultancy = தகவல் தொழில்நுட்ப நிறுவனம் = மாமாக்கள்
Client / Customer = பயனாளர் = முதலாளி (அ) ஏமாற்றுக்காரன்

ரொம்ப சிம்பிள் ஓரு பாலியல் தொழில் போல மணிக்கணக்கில் விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொழிலாளி (Man Hour (or) Man Day) , முதலாளிகளுக்கு ஏவல் செய்ய நிர்ணயிக்கப்படுகிறான். அதை கன்சல்டன்ஸி என்கிற அமைப்பில் இருக்கிற மாமாக்கள் வாங்கி, தங்களுக்கு வேண்டியதை சுருட்டிக்கொண்டு மிஞ்சும் சில்லறையை தொழிலாளிக்கு கொடுக்கிறான். (அப்படியே ஓரு விலை நிர்ணயம் செய்யப்பட்ட பெண் எப்படி பொருளீட்டுகிறாளோ அதை போலவே!)

இந்த மாமாக்களில் பெரிய மாமாக்கள் (TCS,CTS, Polaris, etc...) உண்டு. சிறிய மாமாக்களும் உண்டு.

அயோக்கியதனத்தின் கூடாரமான முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளும் என்ன செய்வார்கள். எப்படி ஏமாற்றுவது? என்பது தான் அடிப்படைக்கொள்கையாகயிருக்க முடியும். அப்படிப்பட்ட முதாலளித்துவ நாடுகள் தான் தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

தங்களுடைய நாட்டில் ஏற்ப்படும் பொருள் செலவை குறைத்து, உலகின் வேறெங்கேயோ கிடைக்கிற மனிதவளத்தை சுரண்டி, தங்களை வளர்த்துக்கொள்வது.

இந்த துறையில் சில தேவைகள் ஏற்ப்படும் போது தேவைப்படும் மனிதவளத்தை இந்தியா, சீனா மாதிரியான நாடுகளிலிருந்து சுரண்டுகிறார்கள். தேவை தீர்ந்தவுடன் அவர்களை அதோகதியாக விட்டுவிடுவார்கள். (உதாரணத்திற்க்கு கணினி மயமாக்கல் அதன் உயரெல்லையை 2000-ம் ஆண்டு தொட்டப்போது ஏற்ப்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு (Systemized was touched its saturation point)).

இப்போதிருக்கும் வலைப்பின்னலில் தகவல் தொழில்நுட்பமும் அதன் உயரெல்லையை தொடும்போது (Networked Systems will touch its saturation point) மீண்டும் வேலைவாய்ப்பு இழப்பு இருக்கும் (இது எதிர்பார்க்கபடுகிற ஆண்டு 2011).

இப்படி நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு என்கிற உண்மையை முதலில் உணர்ந்தால் மட்டுமே. தொடர்ந்து பேசுவது சாத்தியமாகும்.
தொடரும்...

குறிப்பு : விவாதத்தின் தொடக்கமாக வேலைவாய்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று பேசியிருக்கிறேன்.. மற்றவை தொடருவேன். இதை ஓட்டிய விவாதத்தை வரவேற்கிறேன்.

6 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

படிக்க பெரும் வியப்பாக இருக்கிறது.
நல்ல கட்டுரை, விடுமுறை இப்படி டிஸ்கசனின் போச்சா ..

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கோவி!

ஃஃ
படிக்க பெரும் வியப்பாக இருக்கிறது.
நல்ல கட்டுரை, விடுமுறை இப்படி டிஸ்கசனின் போச்சா ..
ஃஃ

ஆமாம் நல்ல காரசாரமான விவாதம்! முழுவதும் எழுதிடனும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் எவ்வளவு முடியுதுன்னு!

ஜமாலன் சொன்னது…

தொடாந்து IT குறித்த கட்டுரைகள் வருகின்றது. படம் வருகின்றது. மக்கள டீவியில் நீததியின் குரல் பரபரப்பாக முழுங்குகிறது. இந்தவாரம் த.தொ. வாரம் என்பதுபொல் தமிழ்மணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இதே பேச்சு. இன்னும் கொஞ்ச நாளில் frontline துவங்கி பெரும் பத்திரிக்ககைகள் கவர் ஸ்டோரி போடும. இந்த பேச்சு பலவிதமான ஒழுங்கமைப்புகளையும் பல எதிரிகளையும் கட்டமைக்கும். ஆதிக்கம் இன்னும் ஐந்து அண்டுகளுக்கு அல்லது 2011 வரை மக்களை இப்பேச்சக்கள் ஆழ்த்தி ஆளத் தயாராகிவிடும். இதுதான் சொல்லாடல்களம் கட்டமைப்பதற்கான முதன்நிலை பேச்சுப் பரவல். போகட்டும்.

2 சதவீதத்திற்கும் குறைவான இவர்கள் இன்று இந்திய தமிழக பண்பாட்டை தீர்மாணிக்கும் காரணியாக மாறி உள்ளனர் என்பது இதில் மற்றொரு அவலம்.

இது ஏன்? மக்கள் பிரச்சனைகளை மறைக்க முதலாளித்துவம் இப்படி ஒரு virtual எதிரியை கட்டமைக்கறதா? அல்லது சமூகத்திற்குள் அமிழ்ந்து கிடக்கும் சில எதிர்ப்பு வாசகங்கள் வெளிப்பட மொழியின்றி தவிக்கும் அவலத்தை போக்கும் முஙற்சியா? அல்லது ஆதிக்கம் IT க்கு எதிராக ஒரு சொல்லாடல் களத்தை கட்டமைப்பதற்கான விளையாட்டைத் துவங்கியுள்ளதா? என்ன நடக்கிறது என்பது கூர்மையாக அவதானிக் வேண்டியதாக உள்ளது. வழக்கம் போல் மயிர் பிளக்கும் அல்ல பிய்க்கும் விவாதம் வேண்டாம்.

உங்களது பார்வையில் ஒரு மையமான காரணத்தை தொட்டுக் காட்டும் தன்மை உள்ளது.

1. //அயோக்கியதனத்தின் கூடாரமான முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளும் என்ன செய்வார்கள். எப்படி ஏமாற்றுவது? என்பது தான் அடிப்படைக்கொள்கையாகயிருக்க முடியும். அப்படிப்பட்ட முதாலளித்துவ நாடுகள் தான் தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.//

2. //இப்போதிருக்கும் வலைப்பின்னலில் தகவல் தொழில்நுட்பமும் அதன் உயரெல்லையை தொடும்போது (Networked Systems will touch its saturation point) மீண்டும் வேலைவாய்ப்பு இழப்பு இருக்கும் (இது எதிர்பார்க்கபடுகிற ஆண்டு 2011).//

இததான் பிரச்சனையின் உண்மையான முகத்தைக் காட்டும் விஷயம். ஆனால், இத்துறை நண்பர்கள் அடிக்கும் லூட்டி என்பது இவர்கள் கைகாட்டுவதற்கு வசதியாக போய்விடுகிறது.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

வடுவூர் குமார் சொன்னது…

வித்தியாசமாக அமையும் என்று நினைக்கிறேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

ஃஃ
...இந்திய தமிழக பண்பாட்டை தீர்மாணிக்கும் காரணியாக மாறி உள்ளனர் என்பது இதில் மற்றொரு அவலம்.
...
ஃஃஃ
இதைப்பற்றி எழுத வேண்டும்...

ஃஃ
இது ஏன்? மக்கள் பிரச்சனைகளை மறைக்க முதலாளித்துவம் இப்படி ஒரு virtual எதிரியை கட்டமைக்கறதா? அல்லது சமூகத்திற்குள் அமிழ்ந்து கிடக்கும் சில எதிர்ப்பு வாசகங்கள் வெளிப்பட மொழியின்றி தவிக்கும் அவலத்தை போக்கும் முஙற்சியா? அல்லது ஆதிக்கம் IT க்கு எதிராக ஒரு சொல்லாடல் களத்தை கட்டமைப்பதற்கான விளையாட்டைத் துவங்கியுள்ளதா? என்ன நடக்கிறது என்பது கூர்மையாக அவதானிக் வேண்டியதாக உள்ளது. வழக்கம் போல் மயிர் பிளக்கும் அல்ல பிய்க்கும் விவாதம் வேண்டாம்.
ஃஃ

மாறுப்பட்ட பார்வை... யோசிக்க வைக்கிறது...

நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் குமார்!

ஃஃ
வித்தியாசமாக அமையும் என்று நினைக்கிறேன்.
ஃஃ
முயற்சிக்கிறேன்! நன்றி!

Related Posts with Thumbnails